சென்னை: சர்வதேச சந்தையில் சீனா பொருளாதார வீழ்ச்சி, ஐரோப்பா பிரிட்டன் நாடுகள் பிரிவு, ஜப்பான் நாட்டின் பொருளாதாரச் சரிவு, நிலையற்ற தன்மையில் இருக்கும் அமெரிக்கச் சந்தையின் சூழ்நிலையில், இந்தியா பொருளாதாரத்திற்கு அடுத்தச் சில வருடங்களுக்கு மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உட்படப் பல்வேறு முன்னணி அமைப்புகளின் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கிறது.
ஆனால் இந்தியாவின் தொழிற்துறை, முதலீட்டுச் சந்தையும் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே வல்லரசு நாடுகளுக்கு இணையான வளர்ச்சி சாத்தியம்.
இத்தகைய வளர்ச்சிக்கு நாட்டில் பணப்புழக்கம் அதிகரிப்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இதற்கு வழிவகுப்பது தான் 'மசாலா பத்திரங்கள்'.
இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை கடுமையான தள்ளாட்டத்தில் இருந்த சூழலில், தொழில் துறை முடக்கம் பொருளாதாரச் சிக்கலை மேலும் அதிகப்படுத்தியது.
அதன் காரணமாக வங்கிகளின் வாராக் கடன்களின் அளவு வரலாறு காணாத உச்சத்தை எட்டி இந்திய பொருளாதாரத்தை அதிகளவில் பாதிக்கத் துவங்கியது. அதன் எதிரொலியாக இந்திய வங்கித் துறையில் தொழில் துறையினருக்கு வளர்ச்சிக்காகத் தேவைப்படும் கடனை போதிய அளவில் அளிக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு அனுமதி!
வாராக் கடன் பிரச்சினைகள் இன்னும் தீராத நிலையில் பல வங்கிகளும் கடன் தருவதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றன. அதுமட்டுமல்லாது, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் என்னும் வட்டி விகிதத்தைக் குறைத்தும்கூட, அதன் முழுப்பலன் இன்னும் பொருளாதாரத்திலும் கடன் வழங்குதலிலும் பிரதிபலிக்க வில்லை.
அதன் காரணமாகக் கடன் வட்டியில் பெரிய மாற்றங்கள் இல்லாதது தொழில் துறைக்கு ஒரு பின்னடைவாக உள்ளது.
மசாலா பத்திரங்கள்
இத்தகைய சூழ்நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு என்று பிரத்தியேகமாக இந்திய நிறுவனங்களால் வழங்கப்படும் ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்களுக்கு ரிசர்வ் வங்கி கடந்த நிதியாண்டில் அனுமதி அளித்தது.
ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்களை மசாலா பத்திரங்கள் என்று அழைக்கப்படுகிறது.
இந்திய நிறுவனங்கள்
இந்தியத் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காகக் கடன் வாங்க முடியாதபட்சத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் மசாலா பத்திரங்கள் மூலம் கடன் வாங்கலாம்.
முதலில் இந்த அனுமதி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே என்று இருந்த சூழலில், தற்போது வங்கிகளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மசாலா பாண்டுகளை வழங்கி கடன் பெறலாம் என்று அறிவித்து உள்ளது ஆர்.பி.ஐ.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தனது பதவிக் காலம் முடிவதற்குச் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த அனுமதியை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இ.சி.பி முறை
அடிப்படையில், பாண்ட் அல்லது பத்திரங்கள் என்றால் கடன் பெறுவதற்காக வழங்கப்படும் கடன் பத்திரம் என்று பொருள். கடன் பத்திர வெளியீடு மூலம் கடன் பெறுவது நிறுவனங்களின் வாடிக்கை.
முன்பு பன்னாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து இந்திய நிறுவனங்கள் கடன் பெறுவது இ.சி.பி. (ECB- External Commercial Borrowings) வழிமுறை மூலம்தான்.
அந்த வழிமுறை மூலம் கடன் பெறுவது நிறுவனங்களுக்கு மிகக் கடினம். ஏனெனில் அந்த வழிமுறையால் நிறுவனங்கள் வெளிநாட்டு கரன்சி மதிப்பில் தான் கடன் பெறவேண்டும்.
உதாரணமாக
டாலர் அல்லது யூரோ போன்ற நாணய பரிமாற்ற முறையில் பன்னாட்டு முதலீட்டாளர்களிடம் கடனைப் பெறவேண்டும். சர்வதேச நாணயச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாகக் கடந்த காலங்களில் இ.சி.பி. மூலம் கடன் திரட்டிய நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்தச் சிக்கலை களைவது தான் மசாலா பத்திரங்களின் நோக்கம்.
ஏனென்றால் இந்த வகைக் கடன் பத்திரங்கள் இந்திய ரூபாய் அடிப்படையில் வழங்கப்படுவதால், சர்வதேச நாணய மதிப்பு மாற்றம் இந்தப் பாண்டுகளை வெளியிட்ட நிறுவனங்களைப் பாதிக்காது என்பது பெரும் நிம்மதி தரும் விஷயம்.
வரிச் சலுகைகள்!
இந்த மசாலா பத்திரங்கள், கடன் பத்திரச் சந்தை இன்னும் சில ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில், அதாவது 50 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகப் பார்க்லேஸ் நிறுவனம் கணித்துள்ளது.
இது போன்ற கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு சில முக்கிய வரிச் சலுகைகளை அளித்திருப்பது மிகப் பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.
மூலதன ஆதாய வரி
இந்த வகையான பத்திரங்களின் முதலீட்டாளர்களுக்கு, டிடிஎஸ் என்பது போன்ற வித்ஹோல்டிங் டாக்ஸ் (Withholding tax) 20 சதவீதத்தில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல், முதிர்வு தொகையைப் பெறும்போது முதலீட்டாளர்களுக்கு மூலதன ஆதாய வரி கிடையாது.
உலக நாடுகளில் வட்டி விகிதம் இன்னும் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதால், இந்த மசாலா பாண்டுகள் மீதான ஆர்வம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குச் சற்று கூடுதலாகவே இருக்கும்.
பெடரல் வங்கி
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை ஏற்றப் போகிறது என்ற பேச்சு அவ்வப்போது இருந்து வந்தாலும் இன்னும் பல ஆண்டுகளுக்கு வட்டி விகிதம் மேலை நாடுகளில் குறைந்த அளவிலேயே காணப்படும் என்று உறுதியாக நம்பலாம்.
முதலீடு செய்வது எளிது
மேலும், நமது அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் நமது கடன் பத்திரச் சந்தையை வலுப் படுத்தும்விதமாக இந்த மசாலா பாண்ட் கடன் பத்திரங்களுக்கு அதிகப்படியான ஊக்கத்தை அளித்து வருகிறது. மசாலா பாண்டுகள் லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் போன்றவற்றில் பட்டியிலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படுவதால், முதலீட்டாளர்கள், இந்த வகைப் பாண்டுகளில் முதலீடு செய்வதும் விற்பதும் எளிது.
இந்தியப் பொருளாதாரமும்.. நிதித் தேவையும்..
இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக நிதி தேவைப்படும் நிலையில் அதிக முதலீடு பெற மசாலா பாண்டுகள் வங்கிகளுக்கு நிதி திரட்ட பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில ஆண்டுகளாகச் சீராக இருந்து வருகிறது. இந்திய ரூபாய் கடந்த சில ஆண்டுகளில், இதர நாடுகளான சீனா, பிரேசில், ரஷியா போன்ற நாடுகளின் நாணயங்களைக் காட்டிலும் மிகவும் சீராகவே இருந்து வந்துள்ளது.
அந்தவகையில், புதிதாகக் கொண்டுவரப்படும் மசாலா பத்திரங்களில் பன்னாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.