500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியின் முன்பு வரிசையில் நின்று இருக்கும் போது பொது மக்கள் இறந்துள்ளதாகச் செய்திகள் வந்து கொண்டே இருக்கும் நிலையில் 12 நாட்களில் 11 வங்கி ஊழியர்கள் மரணம் அடைந்துள்ளது பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் டி தாமஸ் ஃப்ரான்கோ இதைப் பற்றி கூறுகையில் இந்தியா முழுவதும் பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என அனைத்திலும் 2.5 லட்சம் மூத்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
உடல் நலக்குறைவு
நவம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய பண மாற்றக் கொள்கையினால் பல வங்கி ஊழியர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டுப் பாதிப்படைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை ஆந்திராவைச் சேர்ந்த 46 வயதுடைய எஸ்பிஐ வங்கி ஊழியர் பணமாற்றத்திற்காக வந்த வாடிக்கையாளர்கள் மிகுதி மற்றும் அவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல்
இவ்வளவு பிரச்சனைகள் நடந்துவரும் நிலையில் இது குறித்து ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் மவுனமாகவே உள்ளார். எனவே வங்கி ஊழியர்கள் சங்கம் ஆர்பிஐ கவர்னர் தற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மோடி மற்றும் நிதி அமைச்சர்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இருவரும் பொருளாதார நிபுணர்கள் அல்ல என்றும் அதற்கு ஆர்பிஐ வங்கியில் பொருளாதாரத்தை புரிந்து கொண்டு ஆலோசனை வழங்கு பலர் உள்ளனர். ஆனால் அவர்களும் இதில் மவுனமாக உள்ளனர் என்றும் ஃப்ரான்கோ கூறினார்.
பொருளாதாரம் அழிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது
நடப்பு கவர்னர் தான் எடுக்க வேண்டிய முக்கிய முடிவில் இருந்து முற்றிலுமாக தோல்வியைச் சந்தித்து உள்ளார். இதனால் நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை எனப் பலவற்றின் நிலை அழிவை நோக்கிச் சென்று கொண்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கேள்விகள்
ஃப்ரான்கோ புதிய நோட்டுகள் குறித்து இன்னும் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.
500 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதில் என்ன பிரச்சனை? 2000 ரூபாய் நோட்டு 1000 ரூபாயை விட சிறியதாக உள்ளது என்று ஏன் இவர்கள் கண்டுகொள்ளவில்லை? அதனால் தானே 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம் இயந்திரங்களைத் திருத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏன் கிராமங்களில் உள்ள பல கூட்டுறவு வங்கிகளுக்கு பணம் மாற்றுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை? என்று ஃப்ரான்கோ கேள்விகளை முன் வைத்துள்ளார்.
அடிப்படை அறிவு இல்லாதவர்கள்
பணமற்றுக் கொள்கையை நடத்தி வருபவர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் மற்றும் பண பரிவர்த்தனை எப்படி நடக்கும் என்பது குறித்து அடிப்படை அறிவு ஏதும் இல்லை என்றும் கூறினார்.