டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியான பேடிஎம் தேசிய நெடுஞ்சாலை துறையின் டோல் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களான ரிலையன்ஸ் இன்ஃப்ரா, சத்பாவ், ஐஆர்பி, எல்அண்ட்டி மற்றும் ஜிஎம்ஆர் நிறுவனங்களுடன் இணைந்து எல்லா மாநில, தேசிய மற்றும் நகர டோல் கேட்களிலும் பணமில்லா சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
பேடிஎம் குறியீடு
இந்தியாவில் உள்ள எல்லா டோல் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களுடனும் இணைந்ததன் மூலம் டோல்களில் உள்ள பேடிஎம் குறியீட்டினை தங்களது மொபைல் மூலமாக ஸ்கேன் செய்து உடனடியாக பணத்தை செலுத்தலாம்.
இலக்கு
தற்போதைய நிதி ஆண்டு முடிவிற்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை இதன் மூலம் கவர முயன்று வருவதாக பேடிஎம் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
6000-க்கும் மேற்பட்ட டோல் லேன்கள்
பேடிஎம்-இன் இந்தச் சேவையை பயன்படுத்தி இப்போது 6000-க்கும் மேற்பட்ட டோல் லேன்களில் பணம் இல்லாமல் கட்டணம் செலுத்த இயலும் என்றும் தன் மூலம் போக்குவரத்து துறையும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று பேடிஎம் நிறுவனத்தில் மூத்த தலைவர் கிரன் வசிரெட்டி கூறியுள்ளார்.
வணிகர்கள்
இப்போது 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆஃப்லைன் வணிகர்கள் இந்தியா முழுவதும் பேடிஎம் வாயிலாக பண பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்கின்றனர் என்று பேடிஎம் நிறுவனம் கூறுகின்றது.