ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் வெற்றி, ஐரோப்பாவில் பிரிட்டன் வெளியேற்றம், ஆசிய சந்தையில் வர்த்தக வீழ்ச்சி எனப் பல காரணங்களுக்கா இந்திய சந்தையும் சரி வர்த்தகமும் சரி 2016ஆம் ஆண்டில் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்தது.
அனைத்திற்கும் மேலாக மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் மீது விதித்த தடையின் மூலம் காய்கறி கடைக்காரர்கள் முதல், தங்க மற்றும் வைர வியாபாரிகள் வரை அனைத்துத் தரப்பில் அதிகளவிலான பாதிப்பை உருவாக்கி 2016ஆம் ஆண்டு வணிகச் சந்தைக்கும், வணிகர்களுக்கும் மோசமான ஒன்றாக மாறியது.
இந்நிலையில் இந்த 12 மாதங்களில் வணிகர்களை மகிழ்விக்கும் ஒரே நல்ல செய்தி என்றால் அது, மத்திய அரசின் 24 மணிநேர திட்டம் தான்.
24 மணிநேர திட்டம்
இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்கள், வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றை 24 மணி நேரம் (24/7) திறந்திருப்பதற்கும் இயங்குவதற்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர திட்டமிட்டது.
இதற்கான அறிக்கையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இத்திட்டத்தில் உள்ள சாதகப் பாதகங்களை ஆராய மத்திய அமைப்புகள் மத்தியில் விவாதத்திற்கும், ஆலோசனைக்கும் வைத்துள்ளது மத்திய அரசு.
முக்கிய அம்சம்
இந்தச் சட்டத்தில், பெண்கள் இரவு நேரங்களில் வேலை செய்வதற்குரிய வசதிகளையும் இரவு நேரங்களில் பணிபுரியும் பெண்களுக்கு நிறுவனங்கள் வாகன வசதி, பாதுகாப்புகளை ஏற்பாடு செய்து தருவதைக் கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது இதில் குறிப்பிடத்தக்கது.
வர பிரசாதம்
அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தைப் போலவே இந்தியாவில் பல முக்கிய வர்த்தக நகரங்கள் உள்ளது. இந்நிலையில் 24 மணிநேர வர்த்தகச் செய்ய வாய்ப்புகள் அளிக்கும் போது இப்பகுதியில் வர்த்தக உயர்வுக்கான வாய்ப்புகளும், புதிய வர்த்தகத்தை உருவாக்க வாய்ப்புகள் கிடைக்கும்.
இது புதிய வணிகர்களுக்கும், தற்போது சந்தையில் இருக்கும் வணிகர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு.
1 மணிவரை சினிமா
இப்போது ஷாப்பிங் மால்களில் உள்ள தியேட்டர்களில் இரவு 1 மணிவரை காட்சிகள் ஒளிபரப்பாகின்றன. இதற்காகவாவது 1மணிவரை மால்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் உணவகங்கள் 11 மணியோடு மூடப்பட்டு விடுகின்றன. இனி விடிய விடியத் திறந்திருக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்போகிறது மத்திய அரசு
365 நாட்களும் வேலை
தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் இல்லாத அனைத்துக் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் இப்புதிய சட்டத்தின் கீழ் 24 மணிநேரமும் தங்களது வர்த்தகத்தைச் செய்யலாம். இதன் மூலம் மால்கள், சினிமா தியேட்டர்கள், ஐ.டி நிறுவனங்கள், என வர்த்தக அமைப்புகள் 24 மணி நேரமும், வருடத்தின் 365 நாட்களும் இயங்க முடியும்.
ரிசர்வ் வங்கி
தற்போது தொழிற்சாலைகள் சட்டம் 1948-ன் கீழ் வராத நிறுவனங்கள், அச்சு இயந்திர கடைகள், வங்கிகள், சினிமா அரங்குகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் உள்ளடக்கிய அனைத்திற்கும் அனுமதி வழங்க இந்த வரைவு சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் அரசு அலுவலகங்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகிய இரண்டிற்கும் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
இனி விடிய விடியச் சினிமாதான்
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் 24 மணிநேரமும் பேங்க் போகலாம்... விடிய விடிய ஹோட்டல்ல சாப்பிடலாம்.. தியேட்டர்ல சினிமா பார்க்கலாம். ஆனால் அதுக்குப் பாக்கெட்ல பணம் இருக்கணும்.