இந்திய ரயில்வே துறை தங்களது வருமானத்தை உயர்த்தப் பல முயற்சிகளைச் செய்து வருவதும் நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில், தற்போது மத்திய அரசு ரயில் மற்றும் ரயில் நிலையங்களைக் கார்பரேட் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்வதற்காகக் குத்தகைக்கு விடத் திட்டமிட்டுள்ளது.
இதன் வாயிலாக வருடம் முழுவதும் இந்திய ரயில்வே துறை இவர்களின் வாயிலாகத் தொடர் மற்றும் நிலையான வருமானத்தைப் பெற திட்டமிட்டு வருகிறது.
மேலும் இத்திட்டத்தின் வடிவங்கள் முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரத்திற்குள் இதற்கான அனுமதியை ரயில்வே அமைப்பு உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய திட்டம்
இந்திய ரயில்வே துறை வடிவமைத்துள்ள இத்திட்டத்தின் வாயிலாக, ஒரு நிறுவனம் விளம்பரம் செய்வதற்காக ஒரு ரயிலை முழுமையாகக் குத்தகை எடுத்துக்கொள்ள முடியும்.
இதில் ரயில் பெட்டின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்திலும் விளம்பரம் செய்ய மத்திய அரசு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கிறது.
பெரிய கார்பரேட் நிறுவனங்கள்
மேலும் டாடா, ரிலையன்ஸ், ஏர்டெல், வோடாபோன், ஐடிசி, பதஞ்சலி போன்ற பெரிய நிறுவனங்கள் விரும்பினால் ரயில்களை மட்டும் அல்லாமல் ரியல் நிலையத்தையும் கூட முழுமையாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு விளம்பரம் செய்வதற்காகக் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம் எனவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
மோடியின் கட்டளை
சமீபத்தில் ரயில்வே துறை உயர் அதிகாரிகளுடன் மோடி நடத்திய ஆலோசனை கூட்டத்தில், ரியல்வே துறை தங்களது வருமானத்தை உயர்த்த புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என அறிவித்தார்.
இதன் வாயிலாகவே இத்திட்டம் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
காங்கிரஸ்
ஆனால் இதேபோன்ற திட்டம் UPA அரசு திட்டமிட்டது, ஆனால் அதனை முறையாக நடைமுறைக்குக் கொண்டு வரத் தவறியது.
தற்போது மோடி தலைமையிலான அரசு அதேதிட்டத்தைத் தூசி தட்டி மேம்படுத்தப்பட்ட முறையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
200 கோடி ரூபாய் இலக்கு
இத்திட்டத்தின் வாயிலாக ரயில்வே துறையில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு ஊர்தி வருமானம் அல்லாது தனியாக இப்புதிய விளம்பர திட்டத்தின் வாயிலாக 200 கோடி ரூபாய் வரையிலான கூடுதல் வருமானத்தைப் பெற வேண்டும் என இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
மக்கள் மகிழ்ச்சி
பொதுவாக ஆட்சிக்கு வரும் அரசுகள், ரயில்வே துறையின் வருமானத்தை உயர்த்தப் பயணிகள் கட்டணத்தை மட்டும் உயர்த்தி வந்த நிலையில் தற்போது கட்டண உயர்வு ஏதுமில்லாமல் புதிய திட்டத்தின் வாயிலாக வருமான உயர்த்த முடிவு செய்துள்ளது.
வாய்ப்பு
இத்திட்டத்தின் வாயிலாக ரயில்வே துறையின் வருமான உயர்வது மட்டும் அல்லாமல், ரயில்வே நிலையம் மற்றும் ரயில்கள் புதுமை அடையும்.
தமிழ்நாட்டு நிறுவனங்கள்
இத்திட்டத்தை கொண்டு தமிழ்நாட்டின் முக்கிய நிறுவனங்களான டிவிஎஸ், இந்தியா சிமெண்ட்ஸ், அசோக் லெய்லேண்டு, கவின்கேர், சன் நெட்வொர்க், முருகப்பா கரூப் போன்ற நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தை தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்ல முடியும்.