டெல்லி: டிஜிட்டல் பணப் பரிமாற்றம், பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்க மிகப்பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு வங்கி சேமிப்புகளுக்கு அளிக்கப்படும் காப்பீடுகளைப் போலவே மொபைல் வேலெட்-களுக்கும் காப்பீடு வழங்கத் திட்டமிட்டு வருகிறது.
இதற்காக மத்திய அரசு மொபைல் வேலெட் சேவை அளிக்கும் நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்களுக்குப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இப்பேச்சுவார்த்தை எத்தகைய காப்பீடு அளிக்க வேண்டும், அதற்கான விதிமுறைகள், காப்பீட்டின் அளவு எனப் பல காரணிகளை ஆய்வு செய்ய உள்ளது. மேலும் இந்த ஆலோசனை கூட்டம் இரண்டு அல்லது மூன்று முறை நடக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா
மொபைல் வேலெட் பாதுகாப்பு தன்மையை ஆராய்ந்து எவ்வாறான காப்பீடு அளிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள மத்திய அரசு பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (PCI) அமைப்பின் உதவியை நாடியுள்ளது.
பணமதிப்பிழப்பு
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் மொபைல் வேலெட் சேவை பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் இக்கணக்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய நிலையில் இந்திய சந்தையில் ஆக்சிஜென் சர்வீசஸ் இந்தியா, பேடிஎம், ஒலா மணி, ப்ரீசார்ஜ், மொபிக்கிவிக், எஸ்பிஐ பட்டி, ட்ரூபே, ஜியோ மணி மற்றும் ஏர்டெல் மணி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
பரிமாற்ற அளவீடுகள்
தற்போதைய நிலையில் மொபைல் வேலெட் பணப் பரிமாற்ற சேவை தளத்தைப் பயன்படுத்தி மாதம் 1 லட்சம் ரூபாய் வரை பணபரிமாற்றம் செய்ய முடியும். ஆனால் அதற்கு நீங்கள் KYC படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும், இல்லையென்றால் மாதத்திற்கு வெறும் 20,000 ரூபாய் அளவிலான பரிமாற்றங்கள் மட்டுமே செய்ய முடியும்.
மத்திய பட்ஜெட் 2017
பணமதிப்பிழப்புப் பின் வெளிவரும் முதல் பட்ஜெட் அறிக்கை வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மொபைல் வேலெட்களுக்கு அளிக்கப்படும் காப்பீடு குறித்த செய்திகளைப் பட்ஜெட் அறிக்கையில் எதிர்பார்க்கலாம்.