டெல்லி: மத்திய அரசு நவம்பர் 8ஆம் தேதியன்று இந்தியாவில் இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில், மக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை வங்கி கணக்குகளில் அதிகளவில் வைப்பு செய்தனர். இதனுடன் பலர் தங்களிடம் மிகுதியாக இருக்கும் பணத்தை மத்திய அரசால் இலவசமாகத் துவங்கப்பட்ட ஜன் தன் கணக்குகளில் டெபாசிட் செய்தனர்.
இதன் மூலம் நவம்பர் 8ஆம் தேதிக்கு பின்னான, ஒரு மாத காலத்தில் ஜன் தன் யோஜ்னா திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட வங்கி கணக்குகளில் சுமார் 29,000 கோடி ரூபாய் வைப்பு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு வைப்புக் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
29,000 கோடி ரூபாய்
நவம்பர் 8 முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் ஜன் தன் வங்கி கணக்குகளில் மட்டும் 28,973 கோடி ரூபாய் வைப்பு செய்யப்பட்டு, இதன் வைப்பு நிதி அளவீடுகள் வரலாறு காணாத அளவான 74,610 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என நிதியமைச்சகம் வெளிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தடாலடியாகக் குறைவு..
இந்நிலையில் டிசம்பர் 7 முதல் ஜனவரி 11 வரையிலாகக் காலத்தில் வைப்புச் செய்யப்பட்ட நிதியின் அளவீடுகள் 5,582.83 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் மொத்த வைப்பு நிதியின் அளவுகளும் 69,027.17 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜன் தன் வங்கி கணக்குகள்
தற்போதைய நிலையில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா திட்டத்தின் கீழ் சுமார் 26.68 கோடி வங்கி கணக்குகள் இயங்கி வருகிறது.
கட்டுப்பாடுகள்
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ஜன் தன் வங்கிக் கணக்குகளின் பணப் பரிமாற்ற அளவீடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் பின் படிப்படியாக இதன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நவம்பர் 30க்குப் பின் ஒரு மாதத்திற்கு 10,000 ரூபாய் வித்டிராவல் அளவு, அதிகப்படியாக 50,000 ரூபாய் வைப்பு நிதியின் அளவு எனத் தற்போது கட்டுப்பாடுகளாக உள்ளது.
வருமான வரித்துறை
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின் அதாவது நவம்பர் 9ஆம் தேதிக்கு முன் ஜன் தன் கணக்குகளின் வைப்பு நிதியின் அளவுகள் 45,637 கோடி ரூபாயாக இருந்தது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.