டெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று, ஊரக மற்றும் கிராமப்புற வளர்ச்சி மையமாக வைத்து 2017-18ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
பட்ஜெட் 2017 வருமான வரி தளர்வுகளைத் தாண்டி தனிநபர்களுக்குப் பெரிதாக ஏதுமில்லை என்றாலும், நாட்டின் வளர்ச்சிக்கும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் துவண்டுபோன ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
நிதி தேவை
2017-18 வளர்ச்சி திட்டங்களுக்கு மிகப்பெரிய நிதி தேவையில் மத்திய அரசு தற்போது உள்ளது. இதனை எப்படித் தீர்க்கப்போகிறது என்பதே கேள்வியாக உள்ளது.
பங்குகள் விற்பனை
நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி தேவையைப் பூர்த்திச் செய்யக் கடந்த நிதியாண்டில் நிலுவையில் இருக்கும் அரசு நிறுவனங்களின் பங்குகளை விரைவாகப் பொதுச் சந்தை வர்த்தகத்திற்கு விட முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் வருகின்ற நிதியை நேரடியாக வளர்ச்சி திட்டங்களுக்குப் பயன்படுத்த நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
இது மட்டும் அல்லாமல் அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களை 2017-18ஆம் நிதியாண்டியில் பங்குச்சந்தையில் பட்டியலிட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் திரட்டப்படும் மிகப்பெரிய தொகை மூலம் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதிதேவையைப் பூர்த்திச் செய்வதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
வரி வசூல்
இவை அனைத்திற்கும் மேலாக வருமான வரி வசூல் அளவுகளை அதிகளவில் உயர்த்தியுள்ள காரணத்தால் இதன் மூலமாகவும் நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது.