புதன்கிழமை இன்று பட்ஜெட் தாக்கல் செய்த அருண் ஜேட்லி மாத சம்பளக்காரர்கள், விவசாயிகள், வணிகம் செய்பவர்கள், கிராமப் புர மக்கள், ரியல் எஸ்டேட், ஸ்டார்ட் அப், மாணவர்கள் என அனைத்து மக்களுக்கும் எற்ற வகையிலான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
மாத சம்பளக்காரர்கள்
2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதமாக இருந்த வருமான வரியை 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் குறைந்தது 12,500 ரூபாய் வரை சேமிக்க இயலும்.
விவசாயிகள்
அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். விவசாயிகளுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் அளிக்க முடிவு. வேளாண் , பயிற் காப்பீடு திட்டத்திற்கு 13,000 கோடி ஒதுக்கீடு, விவசாயத்தின் வளர்ச்சி 4.1 சதவீதமாக அதிகரிக்கப்படும். விவசாயிகளுக்கு 60 நாட்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வட்டி தள்ளுபடி தொடரும்.
அமைப்புச் சாரா பிரிவு நிறுவனங்கள்
அமைப்புச் சாரா பிரிவு நிறுவனங்களில் குறிப்பிட்ட துறை நிறுவனஙளுக்கு 1 கோடி ரூபாய் வருவாய் வரை ஆடிட் தேவையில்லை என்ற வரம்பு உயர்த்தி 2 கோடி ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே பொன்று சிறு வணிகம் செய்து 10 லட்சம் ரூபாய் வரை நிறுவனத்தில் வருவாய் பெற்று வந்தவர்கள் இனி 25 லட்சம் வரை பெறும் நிறுவனத்தின் வருவாய்க்கு லெட்ஜெர் புக்குகள் போன்றவை பராமரிக்கத் தேவையில்லை.
ஊரக மற்றும் கிராமப்புற வளர்ச்சி திட்டங்களில் புத்துணர்ச்சி
வரலாறு காணாத வகையில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.48,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் ஊரக வளர்ச்சிக்காக இந்திய கிராம புறங்களில் நாள்தோறும் 133 கிலோமீட்டர் தொலைவிற்குச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவில் இருக்கும் அனைத்துக் கிராமங்களுக்கு மின்சார வசதி வழங்க உறுதி செய்துள்ளது.
இதனைக் குறித்த நேரத்தில் சரியான வளர்ச்சியை உறுதி செய்யக் கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.1,87,223 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஊரக வளர்ச்சி திட்டங்களின் ஒரு பகுதியாக இந்தியாவில் 2019ஆம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதி செய்துள்ளார். கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஸ்டார்ட் அப்
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 7 வருடத்திற்கு மெருகேற்றப்படும் போது மூன்று வருடத்திற்கு வரி விலக்கைப் பெற இயலும். இது முன்பு 5 வருட மெருகேற்றப் பணிகளுக்கு மட்டுமே இருந்தது.
மாணவர்கள்
மாணவர்களுக்கு மத்திய அரசு கற்றல் அளவிடும் முறையை அறிமுகப்படுத்த முன்மொழிந்துள்ளது, இதன் மூலம் அறிவியலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், தரமான கல்வியை இளைஞர்களுக்கு வழங்க வழிவகைச் செய்யப்படும். வேலை தேடுபவர்களுக்காக நாடு முழுவதும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.