பெங்களூரு: உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் அதன் வர்த்தகத்தை உயர்ந்த பல முயற்சி செய்து தோற்றுப்போன நிலையில், மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், வர்த்தகத்தை இரட்டிப்பாக்கவும் முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தின் முதல் பகுதியாகப் பெங்களுரில் புதிய தொழிற்சாலையை அமைக்க இந்த அமெரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கர்நாடக அரசு
2016ஆம் நிதியாண்டில் டிசம்பர் மாதத்திலேயே ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் நேரடியாகத் தொழிற்சாலையைத் துவங்க முடிவு செய்த நிலையில் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கும் வர்த்தகத்திற்கும் சரியான இடத்தைத் தேடி வந்தது.
இந்தத் தேடுதல் முடிவில் ஆப்பிள் நிறுவனம் பெங்களுரில் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்குக் கர்நாடக அரசு வரவேற்பு அளித்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டிற்கு இழப்பு
ஏற்கனவே தமிழ்நாட்டில் நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற உலகின் பல முன்னணி மொபைல் தயாரிப்பு தொழிற்சாலைகள் இருக்கும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது தொழிற்சாலையைப் பெங்களுரில் அமைப்பது மிகப்பெரிய இழப்பு தான்.
பிரியாங் கார்கே
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவு சிறப்பானது, இம்மாநிலத்தில் கிடைக்கும் மேம்பட்ட தொழில்நுட்ப தொழில்நுட்பங்கள், சிறப்பான விநியோக மற்றும் சப்ளை சையின் சேவை நிறுவனத்தின் உற்பத்திக்குச் சிறப்பானதாக இருக்கும் எனக் கர்நாடக மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியாங் கார்கே அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஆப்பிள் திட்டம்
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை முழுமையாகத் தயாரிக்கப்போவதில்லை. அதன் உதிரிப் பாகங்களை உலக நாடுகளில் இருக்கும் பல்வேறு உற்பத்தியாளர்களிடம் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்து பெங்களுரில் புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலையில் அனைத்தையும் கட்டமைக்க (அசம்பிள்) உள்ளது.
ஆலோசனை கூட்டம்
பெங்களூரில் அமைக்கப்படும் தொழிற்சாலை குறித்துக் கர்நாடக அரசு, ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளான, பிரியா பாலசுப்பிரமணியம்- ஐபோன் செயல்பாட்டின் துணைத் தலைவர், தீரஜ் சுங் - ஐபோன் செயல்பாட்டின் தலைவர் மற்றும் அரசு விவகார பிரிவின் உயர் மேலாளர் அலி கானபெர் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது.
பீனியா, பெங்களுரூ
ஆப்பிள் நிறுவனத்தின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான விஸ்டிரான் நிறுவனம் பெங்களுரூ பீனியா பகுதியில் அமைக்கப்படும் தொழிற்சாலையில் இருந்து ஐபோன்களைத் தயாரித்து வெளியிட உள்ளது.
மென்பொருள்
மேலும் இதன் வாயிலாக இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கான மென்பொருள் தயாரிப்பை இந்திய மென்பொருள் ஆய்வாளர்கள் மூலம் மேம்படுத்தவும் புதிய செயலிகளை உருவாக்கவும் ஆப்பிள் பயன்படுத்தும் ஷிப்ட் என்னும் புரோகிராமிங் மொழிக்கான பயிற்சியை அதிகமானோருக்கு அளிக்கவும் முடிவு செய்துள்ளது.
இந்தியா
பெங்களுரில் அமைக்கப்படும் தொழிற்சாலையில் ஆப்பிள் மற்றும் விஸ்டிரான் கூட்டணி நிறுவனம் ஐபோன், ஐபேட், ஐபாட் மற்றும் மேக் ஆகியவற்றைத் தயாரிக்க உள்ளது.
உலக நாடுகளில் தயாரிப்பு
ஆப்பிள் நிறுவனம் மூன்றாம் நபர் மூலம் சுமார் 28 நாடுகளில் 766 விநியோகஸ்தர் மூலம் ஐபோன், ஐபேட், ஐபாட் மற்றும் மேக் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஃபலெக்ஸ்டிரானிக்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பு பணிகளைச் செய்து வருகிறது.
விலை குறைவு..
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன், ஐபேட், ஐபாட் மற்றும் மேக் ஆகியவற்றை முழுமையாகத் தயாரித்து டெலிவரி செய்வதால் இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளின் விலை குறைந்தபட்சம் 30 சதவீதம் வரை குறையும். மேலும் ஜிஎஸ்டி மூலம் கூடுதலாக 10 சதவீதம் வரை குறைவது உறுதி.
அடுத்தச் சில வருடங்களில் சைனா போன் போல ஆப்பிள் போனும் அனைவரின் கைகளில் பார்க்க முடியும்.