ஓய்வூதிய நிதி அமைப்பான ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎப் சந்தாதார்கள் பணத்தைத் திருப்பி எடுக்கும் போது ஆதார் அட்டை இல்லாமலும் எடுக்கலாம் என்று கூறுகின்றது.
சென்ற ஜனவரி மாதம் பிஎப் சந்தாதார்கள் பணத்தைத் திருப்பி எடுக்கும் போது கட்டாயமாக ஆதார் அட்டை இருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது. ஆனால் ஆதார் அட்டைக் கட்டாயம் அல்ல என்று ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
படிவம் 10சி
10 வருடத்திற்கும் குறைவாக உள்ள ஊழியர்கள் பிஎப் பணத்தை முழுமையாக மொத்தமாகப் படிவம் 10சி சமர்ப்பித்து எடுக்க முடியும்.
படிவம் 10டி
அதேநேரம் தங்களது பிஎப் பங்கீட்டை ஊழியர்கள் யார் எல்லாம் படிவம் 10 டி பயன்படுத்தி ஓய்வூதியங்களை மாற்றி அமைக்க விரும்புகின்றார்களோ அவர்கள் கட்டாயமாக ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும்.
காரணம்
ஆதார் எண்ணைப் படிவம் 10சி-இன் கீழ் சமர்ப்பித்துப் பணத்தைத் திருப்பி எடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. எனவே 10 டி பயன்படுத்தி ஓய்வூதியங்களை மாற்றி அமைக்க விரும்புபவர்களுக்கு மட்டும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
ஜனவரி மாத அறிவிப்பு
ஜனவரி மாதம் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் முதல் பிஎப் மற்றும் ஓய்வூதிய கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவரும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியது.
பின்னர்ப் பிஎப் பணத்தைத் திரும்பப் பெறும் போது ஆதார் எண் கட்டாயம் என்றும் ஊழியர் ஓய்வூதிய திட்டம் 1995-ன் கீழ் வருபவர்களும் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று வருங்கால வைப்பு நிதி அமைப்புத் தெரிவித்தது.
மேலும் பிஎப் மற்றும் ஓய்வூதிய கணக்கு சந்தாதார்களுக்கு 2017 மார்ச் 31 வரை ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளாக வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.