வருகின்ற ஏப்ரல் 1 முதல் மூன்றாம் நபர்களுக்கான மோடார் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டணங்களை 50 சதவீதம் வரை உயர்த்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மூன்றாம் நபர்களுக்கான காப்பீடு என்றால் வாகனத்தை ஓட்டுபவருக்கான காப்பீடு திட்டமாகும்.
இந்தியாவில் பெரும்பாலானவர்கள் வாகனங்களுக்கு மட்டுமே காப்பீடு எடுக்கின்றனர், இதனால் விபத்து ஏற்படும் போது வாகனங்களுக்கு மட்டும் காப்பீடு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மூன்றாம் நபர்களுக்கான காப்பீட்டை மத்திய அரசு கட்டாயப்படுத்தி உள்ளது.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) சில வாகனங்களுக்கு 30 சதவீதமும், சில தனியார் கார்களுக்கு 50 சதவீதம் வரையிலும் காப்பீடு கட்டணத்தை உயர்த்துவதற்கான ஒரு வரைவு திட்டத்தை உருவாக்கியுள்ளது.
கார்கள்
கார்கள் என்றால் அனைத்து வாகனங்களுக்கு இந்தக் கட்டணம் உயர்வு இல்லை. 1000 சிசி வரையிலான கார்களுக்குக் காப்பீடு கட்டணம் உயர்வு ஏதும் இல்லை. இப்போது 1000 சிசி கார்களுக்கு 2,055 ரூபாய் வரை பிரீமியம் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
1000 முதல் 1500 சிசி கார்கள்
1000 முதல் 1500 சிசி கார்கள் மற்றும் எஸ்யூவி கார்களுக்கு 2,237 ரூபாயாக இருந்து காப்பீடு பிரீமியம் கட்டணம் 3,355 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
> 1500 சிசி
1500 சிசிக்கும் அதிகமாக உள்ள கார்களுக்கு 6,164 ரூபாயாக இருந்த காப்பீடு கட்டணம் 9,246 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக வாகனங்கள்
சரக்கு வாகனங்களுக்கு 50 சதவீதம் வரை காப்பீடு பிரீமியம் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 6 எச்பி வரையிலான டிராக்டர்களுக்கு 510 ரூபாயாக இருந்த பிரீமியம் கட்டணம் 765 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டு சக்கர வாகனங்கள்
75 சிசி-க்கும் குறைவான இரண்டு சக்கர வாகனங்களுக்குக் காப்பீடு கட்டணம் ஏதும் உயர்த்தப்படவில்லை. 75 முதல் 150 சிசி வாகனங்களுக்கு 619 ரூபாயாக இருந்து காப்பீடு கட்டணத்தை 720 ரூபாயாக உயர்த்தி உள்ளனர்.
150 முதல் 350 சிசி வரையிலான வாகனங்களுக்கு 693 ரூபாயாக இருந்த காப்பீடு தொகை 978 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
350 சிசி-க்கும் அதிகமான வாகனங்களுக்கு 796 ரூபாயா இருந்த காப்பீடு கட்டணம் 1,194 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
விண்டேஜ் கார்கள் மற்றும் இ-ரிக்ஷா
விண்டேஜ் கார்கள் 25 சதவீதம் வரை காப்பீடு கட்டணம் குறையவும், இ-ரிக்ஷாக்களுக்கு உயரவும் வாய்ப்புள்ளது.