டெல்லி: உலகச் சந்தையில் நிலவும் மந்தமான வர்த்தகச் சூழ்நிலையின் காரணமாக இந்திய சந்தையில் மார்ச் மாதத்தின் முதல் 10 நாட்களில் சுமார் 10000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
மேலும் பாஜக-வின் அதிரடி வெற்றியால் இந்த முதலீட்டு நிலை தொடர்ந்து நிலைப்பெறும் எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
10 நாளில் ரூ.10,000 கோடி..
மார்ச் மாத்தில் 1-10 தேதிகளுக்குள் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் 9,628 கோடி ரூபாய், கடன் சந்தையில் 660 கோடி ரூபாய் அளவில் மொத்தம் 10,288 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
இது அமெரிக்க டாலர் மதிப்பில் 1.54 பில்லியன் டாலர்.
அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள்
இந்திய முதலீட்டுச் சந்தையில் பிப்ரவரி மாதம் பங்கு மற்றும் கடன் சந்தைகள் இரண்டையும் சேர்த்து மொத்தம் 15,862 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு இருந்தது.
அதேபோல் அக்டோபர்-ஜனவரி மாதங்களில் இந்திய சந்தையில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களால் மொத்தம் 80,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது.
வளர்ச்சி திட்டங்கள்
ஏற்கனவே மத்திய அரசின் மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் சர்வதேச சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவித்தது. இது உள்நாட்டு சந்தையை மிகப்பெரிய அளவில் சரிவை கொண்டு வந்த நிலையில் தான் உபியில் பாஜக மிகப்பெரிய அளவிலான வெற்றியைச் சந்தித்துள்ளது.
இந்தியா
இந்த வெற்றியின் மூலம் மோடி தலைமையிலான அரசின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என முதலீட்டாளர்கள் அதிகளவில் நம்புவதால், இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகின்றனர்.
எதிர்பார்ப்பு
மோடியின் வெற்றியின் மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்ந்து நிலைபெறும். இதனால் மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு 25,000 கோடி வரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.