இந்தியாவில் கள்ள நோட்டுப் புழக்கத்தை அடியோடு தீர்க்கவும், ரூபாய் நோட்கள் கிழியும் பிரச்சனைகளைத் தீர்க்கவும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் பணத்தைப் பிளாஸ்டிக் வடிவில் அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த 10 வருடங்களில் இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை.
மத்திய அரசு ஒப்புதல்
இத்திட்டத்தைச் சோதனை முறையாக முதலில் இந்தியாவில் 5 முக்கிய நகரங்களில் கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ள நிலையில் இத்திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
10 ரூபாய் நோட்டு
சோதனை திட்டம் என்பதால் ரிசர்வ் வங்கி 10 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை மட்டுமே வெளியிட முடிவு செய்துள்ளது. இதிலும் இந்தியா முழுவதும் இல்லாமல் 5 முக்கிய நகரங்களில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
5 நகரங்கள்
பிலாஸ்டிக் நோட்டுகளை இந்திய வெப்ப நிலையில் அதன் தன்மையை ஆராயும் நோக்கில் ரிசர்வ் வங்கி முக்கியப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதன் படி கொச்சி, ஜெய்பூர், சிம்லா, மைசூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய பகுதிகளைத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஒப்புதல் குறித்த அறிவிப்பை லோக்சபாவில் நிதியமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா
உலகில் முதல் முறையாக 1988ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. தற்போது 20க்கும் மேற்பட்ட நாடுகள் இதனைப் பயன்படுத்தி வருகிறது.
இந்தியா
இது பருத்தி-பேப்பரால் தயாரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை விடவும் அதிகப் பாதுகாப்புத் தன்மை உடையதும், போலி நோட்டுகளை உருவாக்க முடியாதவை என்பதால் பொருளாதாரத்தில் வளமிக்க நாடுகள் இதனைப் பயன்படுத்தி வருகிறது.
இந்த வகையில் இந்தியா தற்போது இத்திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த கடந்த 3 வருடமாக ஆர்பிஐ போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.