டிஜிட்டல் இந்தியா முன்னேற்றத்தின் வளர்ச்சியால் நாம் பெருமைகொள்ள வேண்டும், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன.
அதே நேரம் தேர்தல் என்றால் தமிழகத்தில் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு அளிப்பது மிகவும் பிரபலம். அதிலும் தமிழகக் கட்சிகள் ஓட்டுக்கு 5,000 ரூபாய் வரை பணம் கொடுப்பது மட்டும் இல்லாமல் இலவசமாகப் பிரஷர் குக்கர்கள், தொலைக்காட்சிகள், தங்கச் சங்கிலிகள் அளித்தும் வாக்காளர்களை அசத்தும்.
தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற புதிய வழிகள்
இந்தப் பொருட்கள் எல்லாம் விலை குறைவு இல்லை என்றாலும் தமிழக அரசியல் கட்சிகள் இதிலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கப் பல புதிய ஐடியாக்களை இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் யாரும் நினைத்துக்கூடா பார்க்காது ஒன்று என்னவென்றால் நேரடியாகப் பொருட்களைக் கொண்டு சென்று அளித்தால் மாட்டிக்கொள்வோம். இதுவே இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலம் அளித்தால் என்ன செய்ய முடியும்.
இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலம் தேர்தல் பரிசு
ஆம், ஆர்கே நகரில் நடக்க இருந்து தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில் ஓபிஸ் தலைமையிலான அதிமுகப் புரட்சித் தலைவி அம்மா கட்சி ஈடுபட்டுள்ளது. இவர்கள் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் பொருட்களை ஆர்டர் செய்து இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலமாகச் சந்தேகம் வராத வகையில் என்பிடி குடியிருப்புகளில் வழங்கி வருவதாக முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் அளித்த புகாரின் பெயரில் கண்டறியப்பட்டுள்ளது.
வீட்டுக்கு டெலிவரி செய்ய முடியாது என்பதால் டோக்கன்
அதுமட்டும் இல்லாமல் அரசியல் கட்சிகள் சலுகைகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கியும் தங்களது செலவுகளைக் குறைத்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி வீட்டிற்கு டெலிவரி செய்ய முடியாது என்பதால் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுக் குறிப்பிட்ட இடத்தில் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்துள்ளனர்.
இ-காமர்ஸ் போன்று நலப்பணிகள் நடக்குமா
தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணிப்பு நடத்தி வரும் நிலையில் இ-காமார்ஸ் நிறுவனங்களைப் பயன்படுத்தி விலை குறைவாகச் சலுகை விலையில் பொருட்களை டெலிவரி செய்யும் வகையில் முறைகேடுகள் செய்யும் அரசியல் கட்சிகள் பின்னர் மக்களுக்கு ஏதேனும் நீர் பிரச்சனை, மின்சாரப் பிரச்சனை போன்றவை ஏற்படும் போது பிளிப்கார்ட், அமேசான் போன்று வேகமாகத் தீர்வு அளிக்குமா?
தேர்தல் ஆஃபர்
இ-காமர்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பொங்கல், தீபாவளி போன்று சலுகை விலை ஆஃபர்களை அறிவிப்பதுடன் இனி தேர்தல் ஆஃபர் என்ற பெயரிலும் பொருட்களை விற்பனை செய்யும் நிலை வந்தாலும், வரலாம்.
வருமான வரி சோதனை
வெள்ளிக்கிழமை வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடியாக நடத்திய சோதனையில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடும் ஒன்று. ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடக்க இருந்த சூழலில் இவரது வீட்டில் நடந்த சோதனை அனைவராலும் கவனிக்கப்பட்டது.
அது மட்டும் இல்லாமல் இவரது வீட்டில் நடத்திய சோதனையில் ஆர்கே நகர் தேர்தலில் எந்த அமைச்சர் எவ்வளவு பணம் பட்டுவாடச் செய்ய வேண்டும் என்பது வரை பல ஆதாரங்கள் மற்றும் கோடிக் கணக்கில் ரூபாய் நோட்டுகளும் சிக்கின.
வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணை
இவரது வீட்டில் நடந்த சோதனையை அடுத்து நேற்று வருமான வரித் துறையினர் அலுவலகத்தில் ஆஜராகக் கூறியிருந்தனர். விசாரணைக்கு ஆஜரான விஜய பாஸ்கரிடம் வருமான வரித் துறையினர் சரமாரியாகக் கேள்விகளை கேட்கத் துவங்கினர்.
சேகர் ரெட்டி பற்றிய கேள்வி
சேகர் ரெட்டி அளித்த சில தகவலின் பேரில் விஜய பாஸ்கரிடம் சில கேள்விகளை வருமான வரித் துறையினர் வைத்தனர், அப்போது தேர்தலுக்கு செலவு செய்த ஆவணங்கள், சேகர் ரெட்டியிடம் எவ்வளவு கொடுத்து வைத்திருந்தீர்கள் என்ற கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் தான் எனக்கு பணம் அளித்தார்
அப்போது கேள்விக்கு பதில் அளிக்காமல் தான் ஓபிஎஸ் பணத்தை தான் சேகர் ரெட்டியிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும், ஓபிஎஸ் தான் என்னிடம் பணம் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.
ஓபிஎஸ்-க்கு தான் தீவு உள்ளது
அதுமட்டும் இல்லாமல் ஓபிஎஸ் மற்றும் நத்தம் விசுவநாதம் இருவருக்கும் சொந்தமாக ஒரு தீவு உள்ளது என்றும் போட்டுக்கொடுத்தார் விஜயபாஸ்கர்.
இதைக் கேட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஓபிஎஸ் பற்றி எதுவும் நீங்கள் கூற வேண்டியது இல்லை, நாங்கள் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் கூறுங்கள் என்று கூறினர்.
மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு
முறைகேடாக பண பரிவர்த்தனை, சொத்து வாங்கியது எனப் பல ஆதாரங்கள் வருமான வரித் துறையினரிடம் உள்ளதாகவும், இவருக்கும் ஆர்கே நகர் தேர்தலில் பணப் பட்டுவாடா செய்ததற்கும் ஆதாரங்கள் இருப்பதாகவும், அதனால் மீண்டும் விஜய பாஸ்கர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.