மொரோக்கன் நிறுவன தொழிலதிபரும், பொறியாளருமான திரு. மௌஷின் செரார் அவர்களால் பிரக்தி டிசைன்ஸ் தொடங்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இவை இந்திய கிராமங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட திறன் வாய்ந்த ஆற்றல் சேமிப்பு, குறைந்த விலை மற்றும் குறைந்த புகை ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்ட சமையல் அடுப்புகளாகும்.
பாரம்பரிய சமையல் அடுப்புகள்
பாரம்பரிய சமையல் அடுப்புகள் திறனற்றது. அது 5 முதல் 10 சதவிகித எரிபொருள் ஆற்றலை மட்டுமே திறன்படப் பயன்படுத்திக் கொள்கிறது. மீதமுள்ள ஆற்றல் வீணாகிறது. எரிவாயு வீணாவது மட்டுமில்லாமல், அது பெருமளவு புகையை உண்டாக்குகிறது. அந்தப் புகை சமைப்பவர்களால் நேரடியாக உட் சுவாசிக்கப்படுகிறது. நமது வீடுகளில் எப்பொழுதும், சமைப்பவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கிறார்கள், என்கிறார் மொரோக்கன் தொழிலதிபர் மௌஷின் செரார்.
புகையில்லாத சமையல் அடுப்பு
மௌஷினின் தொழில் நிறுவனம் சென்னையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பிரக்தி டிசைன்ஸ் ஆகும். இது ஆற்றலைச் சேமிக்கும், குறைந்த விலை மற்றும் புகையில்லாத சமையல் அடுப்புகளை இந்திய கிராமப்புறங்களுக்காக வடிவமைத்து, தயாரித்து மற்றும் விநியோகித்தும் வருகின்றது.
நியாயமான விலை
இந்திய கிராமப்புற மக்களின் நாடித்துடிப்பை மனதில் வைத்து, இந்த அடுப்புகள் நியாயமான விலைக்கு விற்கப்படுகின்றன. மேலும் அந்த விலையானது உள்ளூர் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் ஒத்துழைப்புடன் கூட்டுச் செயல்பாட்டில் ஊக்கத் தொகையில் அளிக்கப்படுகிறது.
கல்வி
இயந்திர பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, மௌஷின் சுமார் பத்து வருடங்கள் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களான மோட்டரோலா மற்றும் இன்டெல் ஆகிய நிறுவனங்களில் வேலை செய்தார். 2004 ஆம் ஆண்டில் அவர் தூய்மையான எரிபொருளைப் பயன்படுத்தும் சமையல் முறையில், எரிபொருள் ஆற்றல் சேமிப்புக் கொண்ட சமையல் அடுப்புகளை வளரும் நாடுகளுக்கு வடிவமைக்கும் ஒரு தொழில்துறையைப் பற்றி அறிந்தார்.
அவர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு, அமெரிக்காவில் உள்ள ஒரு ஆராய்ச்சி மையத்தில் விறகு எரிபொருளைப் பயன்படுத்தி எரிபொருள் ஆற்றலைச் சேமிக்கும் திறன் கொண்ட அடுப்புக்களைப் பற்றிப் படித்தார். மேலும் ஆப்பிரிக்காவில் இந்த அடுப்புக்களைப் பற்றிய வெவ்வேறு செயல்திட்டங்களில் பணியாற்றினார்.
வெளிநாடுகளிலும் பிரக்தி
2007 ஆம் ஆண்டு அவர் பிரக்தியை வடிவமைத்தார். கடந்த ஏழு வருடங்களில் பிரக்தி அதன் தூய்மையான எரியூட்டும் முறை, எரிபொருள் சேமிப்பு திறன் ஆகியவற்றைக் கொண்ட சமையல் அடுப்புகளால் இந்திய, நேபாள மற்றும் ஹைத்தி நாட்டு மக்களின் இதயங்களை வென்றிருக்கிறது.
மகிழ்ச்சி
கராசனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி, அவருடைய பிரக்தி சமையல் அடுப்பினால் பெருமளவில் மகிழ்ச்சியாக உள்ளார். ‘தொடக்கத்தில் நான் உணவை மண் அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தேன். அந்த அடுப்பு நான் சமைத்துக் கொண்டிருக்கும் நேரம் முழுவதும் ஏராளமான புகையை வெளிவிடும். இதனால் நான் இரும்பிக்கொண்டே இருப்பேன். இருந்தாலும் நான் தொடர்ந்து சமைப்பேன், ஏனென்றால் எனக்குச் சமைப்பதற்கு வேறு தேர்வுகள் இல்லை.
சீக்கிரமாகச் சமைக்க
மேலும் அதில் சமைப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் மற்றும் சமைப்பதற்கு அதிகமான விறகுக் கட்டைகளும் தேவைப்படும். பிரக்தியில் சமைப்பதினால் உடலில் தீக்காயங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் உணவைச் சீக்கிரமாகச் சமைக்க முடிகிறது. இப்பொழுது எனக்குச் சமைப்பதற்கு இரண்டு துண்டுகள் விறகுக் கட்டைகள் மட்டுமே தேவைப்படுகிறது.' என்கிறார் அவர்.
இவரைப் போலவே நிறையப் பெண்கள் பிரக்தியின் விறகு எரிப்பு அடுப்புகளைப் புகழ்கின்றனர்.
விலை
இந்த அடுப்பின் விலை ரூ. 1499 க்கு விற்கப்படுகிறது. மொத்தமாகக் கொள்முதல் செய்து வாங்குவதாக இருந்தால், மிகக் குறைந்த விலையாக ரூ. 999 க்கு விற்கப்படுகிறது. அல்லது அரசு சாரா நிறுவனங்கள் அல்லது இதர நிறுவனங்களின் ஒத்துழைப்போடு சலுகை விலைக்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் இந்த அடுப்புகளின் விற்பனைக்கு உள்ள ஒரே தடை என்னவென்றால், இந்த அடுப்புகளுக்கு எதிரான பாரம்பரிய மண் அடுப்புகளின் போட்டியாகும். உண்மையில் மண் அடுப்புகள் விலையற்றவை.
சுய உதவிக் குழுக்களின் ஊக்கத் தொகை
நாங்கள் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் ஊக்கத் தொகையைப் பெறுவதற்கு முயற்சி செய்கிறோம். ஒரு கிராமப்புற பெண்மணிக்கு, விலை 1000 ரூபாயைத் தாண்டினால் அது மிகப்பெரிய கொள்முதலாக ஆகிறது. மேலும் அது குடும்பத்தினருடன் கலந்து பேசி, மிகுந்த யோசனைக்குப் பிறகு வாங்க வேண்டிய ஒரு விஷயமாகிறது. அடுப்பின் விலை வெறும் ரூ. 999 ஆக இருந்தால், அவரே சுயமாக முதலீடு செய்து வாங்குவதைப் பற்றி யோசிக்கத் தொடங்குகிறார்.
முதலீடு செய்யும் பணத்திற்கு முழுமையான மதிப்பு
மேலும் பாரம்பரிய அடுப்புகள் உண்மையில் விலையற்றதாக இருந்தாலும், எங்கள் அடுப்புகள் முதலீடு செய்யும் பணத்திற்கு முழுமையான மதிப்பினை உடையது என்று நாங்கள் இந்தப் பெண்களை முழுவதுமாகச் சமாதானப்படுத்துகிறோம். நாங்கள் பல நாட்களாக எங்கள் பொறுப்புகளை உணர்ந்து தொடர்ந்து முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி விநியோகித்து வருகிறோம். பெண்கள் எங்கள் வடிவமைப்பு, அடுப்பின் வலிமையான ஆயுட்காலம் அத்துடன் அதன் செயல்பாடு மற்றும் திறன் ஆகியவற்றைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், என்கிறார் பிரக்தி வடிவமைப்பு நிறுவனத்தின் பணியாளர்களில் ஒருவரான சூடே.
கால மாறுதலுக்கேற்ப நிறைய மாறவில்லை
கிராமப்புற இந்தியாவை உற்றுக் கவனித்தால், உலகம் விரைவான விகிதத்தில் மாறிக்கொண்டே இருந்தாலும், கிராமங்களின் முன்னேற்றம் தாமதமாகத்தான் இருக்கிறது. கால மாறுதலுக்கேற்ப நிறைய விஷயங்கள் இன்னமும் கிராமங்களில் மாறவில்லை. அவற்றில் சமையல் அடுப்புகளும் ஒன்று. 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டு வரை கூட, சுமார் 76 சதவிகித இந்திய கிராமப்புறங்களில் சமைப்பதற்கு மண் அடுப்புகளும் மற்றும் எரிபொருளாக இயற்கை கழிவுகளுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெறும் 6 அல்லது 7 வருடங்களில் இந்த எண்ணிக்கையில் தீவிரமான மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
பிரக்தி நிரூபிக்க முயற்சி செய்யும் விஷயம் என்னவென்றால், இயற்கை எரிபொருள் என்பது அசுத்தமான எரிபொருளல்ல, இன்றைய காலக் கட்டத்தில் கூட, இயற்கை எரிபொருட்கள் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதாகும். தூய்மையான சமையல் தொழில்நுட்பம் கிராமப்புறங்களைச் சென்றடைய நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும், இந்த இடைப்பட்ட நேரத்தில் நம்மால் அதிகத் திறன் வாய்ந்த அடுப்புகளை உருவாக்க முடியும். நாங்கள் எரிபொருள் நுகர்வை 70 சதவிகிதமும், வீட்டின் உட்புற மாசுபாட்டை 90 சதவிகிதமும் குறைத்துள்ளோம். இதன் விளைவாக, மக்கள் பணத்தைச் சேமிக்கவும், மற்றும் சிறந்த சுற்றுப்புற சுகாதாரத்தை உருவாக்கவும் உதவி செய்துள்ளோம், என்கிறார் சூடே.
விநியோகஸ்தர்கள்
பிரக்தி தற்போது 8 முதல் 10 விநியோகஸ்தர்களுடன் பணியாற்றி வருகிறது. மேலும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முழுவதும் கிராமப்புற சில்லறை வணிக இணைப்புகளைக் கொண்டுள்ளது. மேலும் தென்னிந்தியாவில் இதுவரை 18.000 அடுப்புகளை விற்றுள்ளது. இந்த அடுப்புகள் சென்னையில் தயாரிக்கப்படுகிறது.