இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ இ-வாலெட் மூலமாக ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் முறையை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அதற்குத் தான் 25 ரூபாய் கட்டணம் என்று தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கும் போது அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கு ஜூன் 1ம் தேதி முதல் 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்ததாகச் செய்திகள் வெளியானது. இதனை நாமும் வெளியிட்டு இருந்தோம். இது குறித்து எஸ்பிஐ வங்கி அதிகாரி ஒருவரை அணுகிய போது இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். மேலும் அதில் பிழை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஏடிஎம் கார்டுகள் பணப் பரிவர்த்தனைக்குக் கட்டணம் இல்லை
டெபிட் கார்டுகள் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுக்கச் சேவை கட்டணம் ஏதும் இல்லை என்றும் எஸ்பிஐ படி செயலி மூலமாக ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுக்கும் புதிய சேவை முறைக்குத் தான் 25 ரூபாய் கட்டணம் என்று எஸ்பிஐ நிர்வாக இயக்குனர் (தேசிய வங்கி) ராஜினிஷ் குமார் தெரிவித்தார்.
எஸ்பிஐ படி டெபாசிட்
மொபைல் வாலெட் பயன்படுத்தி 1,000 ரூபாய் வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யும் போது சேவைக் கட்டணமாக 0.25 சதவீதம் அதாவது 2 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை சேவை வரியுடன் செலுத்த வேண்டும்.
எஸ்பிஐ படி வித்டிராவ்
எஸ்பிஐ படி பயன்படுத்தி 2,000 ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுக்கும் போது குறைந்தபட்சம் 6 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 2.50 சதவீதம் வரை சேவை கட்டணத்தைச் சேவை வரியுடன் செலுத்த வேண்டும்.
எஸ்பிஐ படி கட்டணங்கள் எப்போது முதல்
எஸ்பிஐ படிக்கான இந்தச் சேவை கட்டணங்கள் ஜூ1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகின்றது.
ஐஎம்பிஎஸ்(IMPS) பரிமாற்ற கட்டணம்
எஸ்பிஐ படி செயலி பயன்படுத்தி ஐஎம்பிஎஸ்(IMPS) முறையில் பணத்தை உடனடியாக வங்கி கணக்கிற்கு மாற்றும் போது 3 சதவீதம் சேவை கட்டணத்தைச் சேவை வரியுடன் செலுத்த வேண்டும்.
பழைய அறிவிப்பில் பிழை
எஸ்பிஐ வங்கி முன்பு வெளியிட்ட அறிவிப்பில் பிழை உள்ளது என்றும் புதிய திருத்தப்பட்ட அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் குமார் நம்மிடம் தெரிவித்தார்.