இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த ஒரு வருடமாகப் பல சிக்கல்களைச் சந்தித்து வரும் ஸ்னாப்டீல் நிறுவனத்தை வாங்க 1 பில்லியன் டாலர் அளிக்க உள்ளதாகவும் அதற்கு ஸ்னாப்டீலின் பிரதான முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்க் நிறுவனமும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
சாப்ட்பேங்க், நெக்சஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸ் மற்றும் கலாரி கேப்பிட்டல் உள்ளிட்ட ஸ்னாப்டீலின் முதலீட்டாளர் நிறுவனங்கள் இடையில் உள்ள மோதல்கள் தீரவில்லை என்றாலும், சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் சுமுகமான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தனி நிறுவனமாகச் செயல்படும்
பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் நிறுவனத்தை வாங்க முடிவு செய்தாலும் தனித்தனி நிறுவனமாகத் தான் செயல்படும் என்றும் அடுத்தச் சில நாட்களில் இதற்கான அறிவிப்பும், ஒரு வாரத்தில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
பேச்சுவார்த்தையில் உள்ள சிக்கல்
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜேஸ்பர் இன்ஃபோடெக் நிறுவனம் தான் ஸ்னாப்டீல் நிறுவனத்தை விற்கத் தடையாக இருப்பதாகவும் நெக்சஸ் மற்றும் கலாரி நிறுவனங்கள் வெளியேறும் போது ஜேஸ்பெர் நிறுவனம் விற்க ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்துப் பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் இரண்டு நிறுவனங்களும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.
செவி கொடுத்த ஜேஸ்பர்
சென்ற மாதம் நாம் ஜேஸ்பர் நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்துடனான இணைப்பிற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும், சாப்ட்பேங்க் நிறுவனம் தான் முயற்சி செய்து வருகின்றது என்று செய்தி வெளியிட்டு இருந்தோம். இப்போது அந்தப் பேச்சு வார்த்தையில் குனால் பால் மற்றும் ரோஹித் பன்சால் இருவரும் விற்க முன் வந்துள்ளதாகவும், ஜேஸ்பர் நிறுவனம் செவி சாய்த்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பேடிஎம்
சென்ற மாதம் பிளிப்கார்ட் நிறுவனம் பிரீசார்ஜ் தவிர்த்து 1 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க முன் வந்தது. அதே நேரம் இன்னொரு பக்கம் பேடிஎம் நிறுவனமும் ஸ்னாப்டீல் நிறுவனத்தை வாங்க முயற்சி செய்து வருகின்றது. பிரீசார்ஜ் நிறுவனத்தை வாங்க 40 முதல் 50 மில்லியன் டாலரினை பேடிஎம் அளிக்க முன்வந்துள்ளது.