பெங்களுரூ: நாட்டின் 2வது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸில் ஊழியர்கள் பணிநீக்கம், புதிய தொழில்நுட்ப தளத்தின் அறிமுகம், அமெரிக்காவில் அந்நாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்தும் பணியில் ரொம்பப் பிஸியாக இருக்கும் நிலையில், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே பணிநீக்கம் குறித்த செய்திகள் இந்நிறுவன ஊழியர்களை அதிகளவில் பாதித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பால் இன்போசிஸ் ஊழியர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
சம்பள உயர்வு
பொதுவாக இன்போசிஸ் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் வழங்கப்படும் சம்பள உயர்வு, தற்போது ஜூலை மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான யூபி பிரவின் ராவ் தெரிவித்துள்ளார்.
பிரவின் ராவ்
இன்போசிஸ் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் அனுப்பட்ட மின்னஞ்சலில் பிரவின் ராவ், ஜாப் லெவல் 5 மற்றும் அதற்குக் கீழ் இருக்கும் அதாவது 8 வருட குறைவாக அனுபவம் உடைய ஊழியர்களுக்கான சம்பள உயர்வு ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஆட்குறைப்பு இல்லை
மேலும் இந்த மின்னஞ்சலில் ஜாப் லெவல் 5திற்கு மேல் இருக்கும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து அடுத்தக் காலாண்டில் விவாதிக்கப்படும் என்றும், இதுவரை நிர்வாகத்தில் ஆட்குறைப்பு பற்றி எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
இதன் மூலம் இன்போசிஸ் ஆட்குறைப்புக் குறித்த செய்திகளுக்குத் தான் முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
செயல்திறன்
ஆனால் நிர்வாகம் வெளியேற்ற திட்டமிட்டால் செயல்திறன் அடிப்படையில் மட்டுமே வெளியேற்றப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டு இருந்தார் பிரவின் ராவ்.
செலவின குறைப்பு
இன்போசிஸ் நிர்வாகம் தற்போது வேரியபில் பே அளிப்பது குறித்து மிகப்பெரிய அளவில் ஆலோசனை செய்து வரும் இதேவேளையில் நிறுவனத்தின் அனைத்து பரிவுகளிலும் செலவுகளைக் கட்டுப்படுத்தும் செயல் முறையையும் கையில் எடுத்துள்ளது.
இதனால் உயர் அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் வேரியபில் பே இந்த வருடம் பாதிக்கப்படலாம் என இன்போசிஸ் உயர் அதிகாரிகள் வட்டம் தெரிவித்துள்ளது.
டெக் மஹிந்திரா
இன்போசிஸ் நிறுவனம் டெக் மஹிந்திரா நிறுவனம் அறிவித்ததைப் போலவே ஊழியர்களுக்கான சம்பள உயர்வை ஜூலை மாதம் வரை ஒத்திவைத்தது. அதேபோல் 6 மாதத்திற்கான அரியர் தொகையை அளிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்தது.
இன்போசிஸ் அரியர் தொகை அளிப்பது குறித்து எவ்விதமான செய்திகளையும் தனது அறிக்கையில் பிரவின் ராவ் தெரிவிக்கவில்லை.
ஆனால் உயர் அதிகாரிகளுக்கான சம்பள உயர்வும் டெக் மஹிந்தரா போலவே இன்போசிஸ் செய்துள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் டெக் மஹிந்திராவை இன்போசிஸ் காப்பி அடித்துள்ளது.
கட்டணங்கள் உயர்வு
இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது செலவின குறைப்பு நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ள நிலையில், நிறுவனத்தில் பார்கிங் கட்டணம், பிற வசதிகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக இன்போசிஸ் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
40 சதவீத ஊழியர்கள்
மார்ச் மாத முடிவில் இன்போசிஸ் நிறுவனத்தில் 2,00,300 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 40 சதவீதம் பேர் 8 வருடங்களுக்குக் குறைவான அனுபவம் உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பணிநீக்கம்
பிரவின் ராவ் தனது மின்னஞ்சலில் பணிநீக்கம் இருக்காது என்று உறுதியாகக் கூறவில்லை என்றாலும், இன்போசிஸ் நிர்வாகம் கடந்த வாரம் லெவல் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் இருக்கும் சுமார் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய இன்போசிஸ் முடிவு செய்தது.
லெவல் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் குரூப் பிராஜெக்ட் மேனேஜர், பிராஜெக்ட் மேனேஜர், சீனியர் ஆர்கிடெக்ட் மற்றும் உயர் நிர்வாகத் தலைவர்கள் இருப்பார்கள். மேலும் அவர்கள் அனைவரும் செயல்திறன் அடிப்படையில் வெளியேற்றப்பட உள்ளனர்.
அமெரிக்கச் சந்தை
இந்திய ஐடி சந்தையின் 60 சதவீத வருவாய் அமெரிக்கச் சந்தையை மட்டுமே நம்பியுள்ளது. இது நிறுவனங்கள் வாரியாகச் சில மாற்றங்கள் இருந்தாலும், அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களுக்கும் அமெரிக்கச் சந்தை தான் முக்கியமானவை.
இந்நிலையில் அமெரிக்கச் சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளே இந்திய ஐடி ஊழியர்களையும், நிறுவனங்களையும் நேரடியாகப் பாதித்து வருகிறது.
மாயமாகும் 30 சதவீத வேலைவாய்ப்பு
மேலும் ஐடி துறையில் செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தவதன் மூலம் 2020ஆம் ஆண்டுக்குள் தற்போது இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கையை விடச் சுமார் 20 முதல் 30 சதவீதம் வரையிலான வேலைவாய்ப்புகள் குறையும் எனப் பல ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.