சென்னை: கடந்த சில நாட்களாகத் திரும்பிய பக்கமெல்லாம் ஐடி நிறுவனங்கள், பணிநீக்கம், டிரம்ப், விசா ஆகிய சொற்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம் அவ்வளவு முக்கியமானதா என்று நீங்கள் கேட்கலாம்.
ஆம், இந்தியாவில் ஐடி வர்த்தகச் சந்தையில் மதிப்பு 150 பில்லியன் டாலர் அதாவது 9,64,950 கோடி ரூபாய். ஐடித்துறை பாதித்தால் என்ன..?
ஐடித்துறையின் ஆதிக்கம்..
இந்திய குடும்பங்களில் 10இல் 3 குடும்பங்களில் யாரேனும் ஒருவர் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார்கள். இத்தகைய நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவில் அதிகளவிலான மக்கள் மற்றும் குடும்பங்கள் பாதிக்கப்படப் போகிறது என்றால் சற்று நெஞ்சை அடைக்கும் செய்தியாகவே இது பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் பொருளாதாரத்திலும் கணிசமான தாக்கம் ஏற்படும் என்பது எந்தவகையில் மறுக்கமுடியாது.
56,000 ஊழியர்கள்
இந்திய ஐடி நிறுவனங்கள் இந்த வருடம் சுமார் 56,000 ஊழியர்களைத் தங்களது நிறுவனத்தில் இருந்து வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஐடி துறை மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்க உள்ளது.
மேலும் தற்போது வெளியேற்றப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் இரண்டு மடங்கும் அதிகமாகும்.
இந்தியா
தற்போது பணிநீக்கத்தில் ஈட்டுப்பட்டுள்ள முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் அதிகளவிலான வர்த்தகத்தை வைத்துள்ளது.
7 நிறுவனங்கள்
இன்றைய நாள் வரை இந்தியாவில் பணிநீக்கம் குறித்து அறிவித்துள்ளது 7 நிறுவனம்.
இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக்னாலஜிஸ், காக்னிசென்ட், டிஎக்ஸ்சி டெக்னாலஜி மற்றும் கேப்ஜெமினி ஆகியவை. இந்த நிறுவங்களில் தற்போது 12.4 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில், 2017ஆண்டி சுமார் 4.5 சதவீத ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
ஆட்சேர்ப்பு
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 7 நிறுவனங்களும் புதிய ஊழியர்களை நிறுவனத்தில் இணைக்கும் பணியை 2017ஆம் ஆண்டில் முதல் 2 மாதங்களிலேயே நிறுத்திவிட்டது.
ஆபத்தான நிலையில் ஊழியர்கள்
பொதுவாக நிறுவனங்கள் செயல்திறன் அடிப்படையில் மட்டுமே ஊழியர்களை வெளியேற்றப்படுவதாக முடிவு செய்துள்ள நிலையில், காக்னிசென்ட் நிறுவனம் சுமார் 15,000 ஊழியர்களைக் கடைசி ரேடிங் ஆன பக்கெட் IVஇல் வைத்துள்ளது.
இதேபோல் இன்போசிஸ் 3000 சீனியர் மேனேஜர்களைக் கடைசி ரேடிங் அதாவது கண்டிப்பாகத் தங்களது செயல்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டத்தில் வைத்துள்ளது.
டிஎக்ஸ்சி டெக்னாலஜி
இந்நிறுவனம் அடுத்த 3 வருடத்தில் இந்தியாவில் இருக்கும் தனது 50 அலுவலகங்களை 26ஆக அதாவது 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் தனது 1,70,000 ஊழியர்கள் எண்ணிக்கையில் 10,000 பேரை இந்த வருடம் வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
இயல்பு
ஒவ்வொரு வருடமும் இந்திய ஐடி நிறுவனங்கள் செயல்திறன் அடிப்படையில் 1-1.5 சதவீத ஊழியர்களை வெளியேற்றும், அதேபோல் இந்தியாவில் அதிக வர்த்தகம் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் 3 சதவீதம் வரை பணிநீக்கம் செய்யும்.
தற்போது இந்த அளவீடு 2-6 சதவீதம் வரையிலான உயர்வை அடைந்துள்ளது. இதுவே தற்போதைய பிரச்சனை.