பீடி, சிகிரெட் மக்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் விதமாக 100 சதவீத வரி விதிக்க வேண்டும் என்றும், தங்கத்தின் மீது உயர்த்தக் கூடாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திங்கட்கிழமை மாலை இவர் விடுத்த அறிக்கையின் முழு விவரங்களையும் இங்குப் பார்ப்போம்..!
தில்லியில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவை வரிக் குழு கூட்டத்தில் தங்கத்திற்கு 3 விழுக்காடு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கும் அதிக அளவில் வரி விதிக்கப்பட்டிருக்கிறது.
மக்களைப் பாதிக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி, இந்தியாவிலும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் பொருட்கள் மற்றும் சேவை வரி முறை அறிமுகம் செய்யப்படுகிறது. பெரும்பாலான பொருட்களுக்கான வரி விகிதங்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், தங்கம், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களுக்கான வரி விகிதங்களைத் தீர்மானிப்பதற்காக ஜூன் 3-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
தங்கத்திற்கு இப்போது ஒரே ஒரு விழுக்காடு மட்டும் தான் மதிப்புக்கூட்டு வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அது பொருட்கள் மற்றும் சேவை வரி என்ற பெயரில் 3 விழுக்காடாக உயர்த்தப் பட்டுள்ளது.
வரி விதிப்பு என்பது இத்துடன் நின்றுவிடப்போவதில்லை
தங்கம் மீதான வரி விதிப்பு என்பது இத்துடன் நின்றுவிடப்போவதில்லை. தங்கத்தின் மீது 10 விழுக்காடு சுங்கவரியும், ஒரு விழுக்காடு உற்பத்தி வரியும் விதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தங்கத்தின் மீதான சேதாரம், செய்கூலி ஆகியவற்றை உள்ளடக்கிய மதிப்புக் கூட்டு சேவைக் கட்டணம் மீது 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தங்கத்தின் மீது 15.67 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. இது மிகவும் அதிகமான வரி விதிப்பாகும்.
3.24% வரி உயர்வு
தங்கத்தின் மீது இப்போது சுங்கவரி, மதிப்புக் கூட்டு வரி, கலால்வாரி உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து 12.43% மட்டுமே வரி வசூலிக்கப்படுகிறது. புதிய வரி விதிப்பு முறையில், இப்போது இருப்பதைவிட 3.24 விழுக்காடு அதிகமாக வரி வசூலிக்கப்படும். மேலோட்டமாகப் பார்க்கும் போது 3.24% வரி உயர்வு என்பது சாதாரணமான ஒன்றாகத் தெரியும். ஆனால், தங்கத்தின் மதிப்பின் மீது கணக்கிட்டுப் பார்த்தால் தான் அதன் உண்மையான தாக்கம் தெரியவரும்.
கூடுதல் செலவு
உதாரணமாக ஒரு பவுன் தங்கத்தின் விலை செய்கூலி மற்றும் சேதாரம் சேர்த்து ரூ.25 ஆயிரம் என்று வைத்துக் கொண்டால், இதுவரை செலுத்தியதைவிட இப்போது கூடுதலாக ரூ.810 வரி செலுத்த வேண்டியிருக்கும். ஒரு பவுன் தங்கத்திற்கு மொத்தமாக ரூ. 2985 வரியாக வசூலிக்கப்படுகிறது. இது எந்த வகையில் பார்த்தாலும் நியமற்றது.
கோடீசுவரர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடியதாகவோ இருந்தால் வரியை வரவேற்கலாம்
தங்கம் ஆடம்பரமானதாகவோ, கோடீசுவரர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடியதாகவோ இருந்தால் அதன்மீது அளவுக்கு அதிகமாக வரிகள் விதிக்கப்படுவதை வரவேற்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்திய கலாச்சாரத்தின்படி தங்கம் என்பது திருமணத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஏழைக் குடும்பத் திருமணமாக இருந்தாலும் கூட, குறைந்தது 10 முதல் 15 பவுன் தங்கம் வரதட்சணையாக வழங்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. இதை உணர்ந்து தான் தமிழக அரசாங்கமே ஏழைக் குடும்பங்களுக்குத் தாலிக்குத் தங்கம் திட்டத்தின் தலா ஒரு பவுன் தங்கத்தை இலவசமாக வழங்கி வருகிறது. புதிய வரிவிதிப்பின்படி ஒரு ஏழைக்குடும்பம் திருமணத்திற்காக 10 பவுன் தங்கம் வாங்கினால் சுமார் ரூ.30,000 வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும். இது பகல் கொள்ளைக்குச் சமம்.
98% நாடுகளில் தங்கத்தின் மீது இறக்குமதி வரி இல்லை
உலகின் 98% நாடுகளில் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால், இந்தியாவில் மட்டும் தான் 10% இறக்குமதி வரி வசூலிக்கப்படுகிறது. 2012&13 ஆம் ஆண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருந்தபோது தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிமுகப்படுத்தினார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி ரத்துச் செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி இன்றுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதைச் செய்வதற்குப் பதிலாக மேலும், மேலும் வரிகளை அதிகரித்துக் கொண்டே செல்வது மக்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும்.
தங்கம் கடத்தல் அதிகரிக்கும்
அளவுக்கதிகமாக வரி விதிக்கப்படும் போது, அதைத் தவிர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் தங்கம் கடத்தி வரப்படும். அது இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குத் தடையை ஏற்படுத்தும். எனவே, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, கலால் வரி ஆகியவற்றை முற்றிலுமாக ரத்து செய்வதுடன், பொருட்கள் மற்றும் சேவை வரியையும் ஒரு விழுக்காடாகக் குறைக்க வேண்டும்.
ஏழை மக்களின் உணவுப் பொருட்களுக்கு 18% வரி
ஏழை மக்களின் உணவுப் பொருட்களில் ஒன்றாகக் கருதப்படும் பிஸ்கட்டுகளுக்கு 18% பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டிருப்பதும், ரூ.500-க்கும் அதிக விலை கொண்ட காலணிகளுக்கு 18% வரி விதிக்கப்பட்டிருப்பதும் ஏழைகளைக் கடுமையாகப் பாதிக்கும். அதேநேரத்தில் உடல்நலத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் பீடிக்கு 28% மட்டுமே வரி விதிக்கப்பட்டிருக்கிறது. பீடி, சிகரெட் ஆகியவற்றை மக்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் அவற்றுக்கு 100% வரி விதிக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.