பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியன் கார்ப்ரேஷன் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்கள் ஜூன் 16 முதல் நாடு முழுவதும் தினமும் பெட்ரோல் விலையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளன.
இதற்கான சோதனை ஓட்டமாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தினமும் சண்டிகர், ஜாம்ஷெட்பூர், புதுச்சேரி, உதய்பூர் மற்றும் விஷாகாபட்டினம் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டன.
எண்ணெய் நிறுவனங்களின் இந்த முடிவால் உலகளவில் ஏற்படும் எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொருத்து தினமும் பெட்ரோல் விலையில் சிறியதாக மாற்றம் இருக்கும்.
சோதனை
சண்டிகர், ஜாம்ஷெட்பூர், புதுச்சேரி, உதய்பூர் மற்றும் விஷாகாபட்டினம் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட 40 நட்கள் சோதனை முயற்சியில் எந்தச் சிக்கலும் இல்லாததால் அனைத்துப் பங்குதாரர்களுக்கும் தினமும் விலை மாற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய இந்தியன் ஆயில் நிர்வாகத் தெரிவித்துள்ளது.
டிரேடர்ஸ் கூட்டமைப்பு
ஆல் இந்தியா பெட்ரோலியம் டிரேடர்ஸ் கூட்டமைப்பின் கீழ் இயங்கி வரும் 54,000-க்கு மேற்பட்ட பெட்ரோல் நிலயங்கள் எண்ணெய் நிறுவனங்களின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 16-ம் தேதி ‘வாங்கவும் மாட்டோம் விற்கவும் மாட்டோம்' என்று போராட்டத்தை அறிவித்துள்ளன.
சோதனையில் நட்டம்
தினமும் பெட்ரோல் விலை 5 நகரங்களில் மாற்றம் செய்ததால் அங்கு உள்ள பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்குப் பெருத்த நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பெட்ரோல் நிலையங்களில் விற்பனை அளவு
இந்தியாவில் உள்ள 50 சதவீதம் பெட்ரோல் நிலையங்கள் மாதத்திற்கு 30 கிலோ லிட்டர் வரை எரிபொருள் விற்பனை செய்கின்றனர். ஒரு டேங்கர் லாரியில் 18 கிலோ லிட்டர் எரிபொருள் கொண்டு வரப்படும். இதனை விற்பனை செய்ய 7 முதல் 10 நாட்கள் வரை எடுக்கும். தினமும் பெட்ரோல் விலையை மாற்றி அமைப்பது போன்ற முயற்சிகளால் பல சிக்கல்கள் ஏற்படும் என்று ஆல் இந்தியா பெட்ரோலியம் டிரேடர்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தாமதமாகும் டெலிவரி
மேலும் ஒரு லாரி பெட்ரோல் ஆர்டர் செய்தால் அது பெட்ரோல் நிலையம் வந்து சேர மூன்று நாட்கள் வரை ஆகின்றது, நாங்கள் வாங்கும் போது பெட்ரோல் விலை உயர்ந்தும் விற்கும் போது குறைந்தும் இருந்தால் அந்த நாட்டத்திற்கு யார் பொறுப்பேற்பது என்கின்றனர்.
விலை குழப்பத்தைக் குறைக்க ஐஓசியின் திட்டம்
வாடிக்கையாளர்களுக்குப் பெட்ரோல் விலையில் குழப்பம் ஏற்படாத அளவில் 26,000 முறையே பயிற்சி அளிக்கப்படும் என்றும், பெட்ரோல் விலை முன்கூடியே இரவு 8 மணி அளவில் டீலர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் ஐஓசி கூறியுள்ளது.
ஆட்டோமெட்டிக் சிஸ்டத்தின் படி இயங்கும் 10,000 பெட்ரோல் நிலையங்களில் தானாகவே பெட்ரோல் விலை மாறிவிடும் என்றும் குழப்பம் ஏதும் இருக்காது என்றும் இந்திய ஆயில் கார்பேஷன் லிமிடட் கூறுகின்றது.
ஆட்டோமெட்டிக் சிஸ்டம் இல்லாத பெட்ரோல் நிலையங்கள்
ஆட்டோமெட்டிக் சிஸ்டம் இல்லாத பெட்ரோல் நிலையங்களுக்கு எஸ்எம்எஸ், மின்னஞ்சல், மொபைல் செயலி மற்றும் இணையதளம் வழியாக விலை குறித்த தகவல்கள் அளிக்கப்படும்.
டீலர்கள் இப்போது எப்படி விலையை மாற்றி அமைக்கின்றார்களோ அதே போன்று இப்போது தினமும் மாற்றி அமைக்க வேண்டும் என்று ஐஓசி தெரிவித்துள்ளது.
தினமும்
ஒவ்வொரு நாளும் பெட்ரோல் விற்பனையைத் துவங்கும் முன் டீலர்கள், பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் விலையைப் பார்த்து மாற்ற வேண்டும் என்றும்.
தினமும் பெட்ரோல் விலையை மாற்றி அமைப்பது என்பது வாடிக்கையாளர்கள் மற்றும் செயல்முறை இடையிலான வெளிப்படைத்தன்மையைக் காண்பிக்கின்றது என்றும் ஐஓசி கூறியுள்ளது.