உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் ஏர் விஸ்தரா நிறுவனம் மழைக்காலச் சலுகையாக 849 ரூபாய்க்கு விமான டிக்கெட்டினை அறிவித்துள்ளது
விஸ்தரா நிறுவனத்தில் இந்த மழைக்காலச் சலுகையில் 5 நாட்கள் வரை டிக்கெட் கிடைக்கும். இதுவே பிரீமியம் எகானமி சீட்டுகளாக இருந்தால் 2,099 விமானக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
கூட்டு நிறுவனம்
இந்தியாவில் இருந்து டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என இரண்டு நிறுவனங்களின் கூட்டு நிறுவனமே விஸ்தரா ஆகும். விஸ்தரா நிறுவனத்தின் இந்த மழைக்கால ஆஃபரில் ஜூன் 13 முதல் ஜூன் 17 வரை டிக்கெட் புக் செய்யலாம்.
ஆஃபர்கள் உள்ள வழித்தடங்கள்
விஸ்தரா நிறுவனத்தின் சலுகை விலையில் கோவா, போர்ட் பிளேர், லே (லடாக்), ஜம்மு, ஸ்ரீநகர், கவுஹாத்தி, அம்ரித்ஸர், புவனேஸ்வர், டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.
மறைமுகக் கட்டணம் இல்லை
விஸ்தராவின் இந்தச் சலுகை விலை சீட்டுகளில் என்ன விலை வருகிறதோ அதை மட்டும் செலுத்தினால் போதும், மறுமுகக் கட்டணம் ஏதும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வழிப் பயணம் மற்றும் திரும்பி வருவதற்கான பயணம் என இரண்டுக்கும் எக்கானமி மற்றும் பிரீமியம் எக்கானமி வகுப்புகளில் இந்தச் சலுகைகளைப் பெற்றுப் பயணம் செய்யலாம்.
849 ரூபாய் ஆஃபர்
அதே நேரம் இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் நேரடி விமானப் பயணங்களுக்கு மட்டுமே கிடைக்கும். விஸ்தரா நிறுவனத்தின் 849 ரூபாய் சலுகை விலையில் ஜம்மு-ஸ்ரீநகர் வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.
பிற வழித்தடங்கள்
பெங்களூரு - கவுகாத்தி செல்ல 899 ரூபாயும், டெல்லி - சண்டிகர் செல்ல 1,399 ரூபாயும், டெல்லி-லக்னோ மற்றும் டெல்லி அம்ரிஸ்டர் செல்ல 1,499 ரூபாய் எனவும் டிக்கெட் கட்டணங்கள் அறிவித்தது மட்டும் இல்லாமல் இன்னும் பிற வழித்தடங்களிலும் எக்கானமி மற்றும் பிரீமியம் எக்கானமி வகுப்பு டிக்கெட் கட்டணங்களை விஸ்தரா நிறுவனம் குறைத்து அறிவித்துள்ளது.
உள்நாட்டு விமானப் பயணம்
உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை ஜனவரி-ஏப்ரல் காலகட்டத்தில் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 17.71 சதவீதம் அதாவது 309.35 லட்சமாக இருந்து பயணிகளின் எண்ணிக்கை 364 லட்சமாக அதிகரித்துள்ளது என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.