7வது சம்பள கமிஷனின் கீழ் 50 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய கொடுப்பனுவுகள் மற்றும் வீட்டு வாடகைப்படி குறித்த முக்கிய அறிவிப்பை நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
7வது சம்பள கமிஷன் பரிந்துரைத்துள்ள கொடுப்பனுவுகளுக்கு மத்திய அமைச்சகம் 34 திருத்தங்களுடன் 2017 ஜூலை 1 முதல் அமலுக்கு வருமெனப் புதன்கிழமை சற்று நேரத்திற்கு முன்பு அனுமதி அளித்துள்ளது.
இந்த அறிவிப்பின் கீழ் 34 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 14 லட்சம் பாதுகாப்புத் துறை சார்ந்த ஊழியர்கள் பயனடைவார்கள்.
வீட்டு வாடகைப்படி
எச்ஆர்ஏ எனப்படும் வீட்டு வாடகைப்படி 24%, 16% மற்றும் 18 சதவீதத்திற்கும் குறைவாக அளிக்கப்பட மாட்டாது. எச்ஆர்ஏ ஊழியர்கள் பணிபுரியும் நகரங்களைப் பொருத்து அளிக்கப்படும்.
குறைந்தபட்சம் எவ்வளவு வீட்டு வாகடைப்படி கிடைக்கும்?
அப்படியானால் 5400, 3600 மற்றும் 1800 ரூபாய்க்கும் குறைவாக வீட்டு வாடகைப்படி குறைய வாய்ப்பில்லை. குறைந்த பட்சம் 18,000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்களுக்கு 30, 20 மற்றும் 10 சதவீதம் வீட்டு வாடகைப்படி அளிக்கப்படும். இதனால் 7.5 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்.
7வது சம்பள கமிஷன் குழு பரிந்துரை
கிரகப்படி எப்போது 50 சதவீதம் மற்றும் 100 சதவீதத்தினை எட்டிப் பிடிக்கின்றதோ அப்போது பரிந்துரைக்கப்பட்ட வீட்டு வாடகைப்படியை அளிக்கலாம் என்று 7வது சம்பள கமிஷன் குழு பரிந்துரைத்து இருந்தது. ஆனால் அரசு கிரகப்படி 25 சதவீதமாகவும், 50 சதவீதமாகவும் இருக்கும் போதே மாற்றி அமைக்க அனுமதி அளித்துள்ளது.
சியாச்சேன் கொடுப்பனவு
இராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் சியாச்சேன் கொடுப்பனவு எனப்படும் அலவென்ஸ் மாதம் 14,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாயாகவும், அதிகாரிகளுக்கு 21,000 ரூபாயில் இருந்து 42,000 ரூபாயாகவும் அதிகப்படியான ரிஸ்க் மற்றும் கடுமையைப் பொருத்து அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அலவன்ஸ்
ஓய்வூதியதார்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர மருத்துவ அலவென்ஸ் 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படுகின்றது.
நிலையான வருகைக்கான கொடுப்பனவு
100% விடுமுறை எடுக்காமல் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் கொடுப்பனுவுகள் 4,500 ரூபாயில் இருந்து 6,750 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நர்சிங் கொடுப்பனவு
நர்சிங் கொடுப்பனவு 4,800 ரூபாயில் இருந்து 7,200 ரூபாயாக அளிக்கப்படும்.
அறுவை சிகிச்சை தியேட்டர் கொடுப்பனவு
அறுவை சிகிச்சை தியேட்டர் கொடுப்பனுவு 360 ரூபாயில் இருந்து 540 ரூபாயாக உயர்த்தி அளிக்கப்படும்.
நோயாளி பராமரிப்புக் கொடுப்பனவு
நோயாளி பராமரிப்புக் கொடுப்பனவு 2070 ரூபாய் முதல் 2100 ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்தது. அது இப்போது 4,00 ரூபாய் முதல் 5,300 ரூபாய் வரை உயர்த்தி அளிக்கப்படும்.
அரசுக்கு ஏற்பட இருக்கும் செலவு
கொடுப்பனுவுகள் உயர்த்தப்பட்டுள்ளதால் அரசுக்குக் கூடுதலாக ஆண்டுக்கு 30,748 கோடி வரை செலவாகும் என்று கூறப்படுகின்றது.
196 கொடுப்பனுவுகள்
7 வது சம்பள கமிஷன் இப்போது உள்ள 196 கொடுப்பனுவுகளில் 53-ஐ நீக்கவும் சிலவற்றை இணைக்கவும் பரிந்துரைத்துள்ளது.
கொடுப்பனுவுகள் நீக்கம்
அது மட்டும் இல்லாமல் 52 கொடுப்பனுவுகளை நீக்கவும், 36 கொடுப்பனுவுகளை இணைக்கவும் முன்மொழிந்துள்ளது. 12 கொடுப்பனுவுகள் எந்த வித மாற்றமும் இல்லாமல் முன்பு இருந்ததைப் போலவே தொடரவும் 7 வது சம்பள கமிஷன் குழு முன்மொழிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.