2017-2018 நிதி ஆண்டு இறுதிக்குள் சமையல் எரிவாயு மீது உள்ள மானியத்தினை முழுமையாகத் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் எல்பிஜி சிலிண்டர்கள் விலையை 2 ரூபாய் ஏற்றி மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
மானியம் மூலம் அளிக்கப்படும் 14.2 கிலோ சிலிண்டர் தற்போது டெல்லியில் 477.46 ரூபாய்க்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் 2 ரூபாய் உயர்த்தி 479.77 ரூபாயாகப் பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
எண்ணெய் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான நேற்று மாநிலங்கள் அவையில் 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் எரிவாயுவிற்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தினை முழுமையாகக் குறைக்க ஒவ்வொரு மாதமும் 4 ரூபாய் வரை விலை உயர்த்த அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
2 ரூபாய் உயர்வு
முதலில் மத்திய அரசு மானியம் விலையில் அளிக்கப்படும் சிலிண்டர்களுக்கு ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்களை வாட் இல்லாமல் 2 ரூபாய் விலை உயர்த்த அறிவுறுத்தி இருந்தது.
எதனால் 4 ரூபாய் உயர்வு
தற்போது மானியத்தினை முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் 4 ரூபாயாக விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மாநிலங்கள் அவையில் மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கை
ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுதோறும் 14.2 கிலோ எடை உள்ள 12 சிலிண்டர்களை மானிய விலையில் அரசு அளித்து வருகின்றது.
மானியம் இல்லா சிலிண்டர் விலை குறைப்பு
இந்தியன் ஆயில் நிறுவனத்தினைப் பொருத்த வரையில் மானியம் இல்லா சிலிண்டரின் விலை நேற்று வரை இருந்த 564 ரூபாய் விலையினை 524 ரூபாயாக டெல்லியில் குறைத்துள்ளது.
விமான டர்பைன் எரிபொருள் விலை உயர்வு
அதே நேரம் எண்ணெய் நிறுவனங்கள் விமானங்களுக்குப் பயன்படும் டர்பைன் எரிபொருள் விலையினையும் 2.3 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
47,013 ரூபாயாக இருந்த விமானங்களுக்கான எரிபொருள் இப்போது 48,110 ரூபாய் கிலோ லிட்டராக 1097 ரூபாய் உயர்த்தி விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எரிவாயு பயன்படுத்தும் பயனர்கள் எண்ணிக்கை
இந்தியாவில் மொத்தம் 18.11 கோடி வாடிக்கையாளர்கள் மானிய விலையில் எரிவாயு இணைப்பினை பயன்படுத்துகின்றனர். இதில் 2.6 கோடி நபர்கள் ஏழைப் பெண்களுக்காகப் பிரதான் மந்திரி உஜாலா யோஜனா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பினை பெற்றவர்கள் ஆவர். மொத்தமாக 2.66 கோடி நபர்கள் மானியம் இல்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்துகின்றனர்.