இந்திய சந்தையில், அமெரிக்க ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் இறங்கியதன் மூலம் ஈகாமர்ஸ் துறையில் கொடிகட்டி பறந்த பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் வர்த்தக ரீதியில் மிகவும் கோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. தற்போது ஸ்னாப்டீல் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இவை அனைத்திற்கும் அமேசான் தான் காரணமென்றால் மிகையாகாது. இந்நிலையில் அமேசானின் அடுத்தத் திட்டம் பிக் பஜார் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ரிடைல் வர்த்தகம்
சமீபத்தில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் ரீடைல் சந்தையில் (ஆன்லைன் மற்றும் ரீடைல் ஸ்டோர்) உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்காக மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்றது.
இதன் மூலம் அமேசான் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஆன்லைன் உணவுப் பொருட்கள் விற்பனை சந்தையில் களமிறங்க முடிவு செய்துள்ளது.
தீபாவளி
அமேசானின் ஆன்லைன் உணவுப் பொருட்கள் விற்பனை தீபாவளிக்கு அறிமுகம் செய்யப்படும் என 90 சதவீதம் உறுதியாகியுள்ள நிலையிலும் இதுகுறித்து எவ்விதமான அறிவிப்பையும் இந்நிறுவனம் வெளியிடவில்லை.
பிக் பேஸ்கட்
ஆன்லைன் உணவுப் பொருட்கள் விற்பனையில் அமேசான் இறங்குவதன் மூலம் இத்துறையில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் பிக் பேஸ்கட் தற்போது புதிய புதிய திட்டத்தைத் தீட்டு வருகிறது.
மேலும் பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்துள்ள காரணத்தால் பிக் பேஸ்கட் அமேசான் நிறுவனத்தின் வர்த்தகப் பாதிப்பை எளிமையாக எதிர்கொள்ள முடியும்.
பிக் பஜார்
அமேசான் அமெரிக்காவிலும் இதேபோன்ற நடைமுறையில் மொத்த நுகர்வோர் சந்தையையும் கைப்பற்றி அசத்தி வருகிறது. அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் திட்ட வரைமுறைகளைப் பார்க்கும் போது அடுத்து அமேசானின் திட்டம் ரீடைல் ஸ்டோர் (Brick and Mortar store) மூலம் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெறுவது தான்.
இதன் பிடி பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், பிக் பேஸ்கட் நிறுவனங்களின் வரிசையில் தற்போது பிக் பஜார் நிறுவனமும் பாதிக்கப்பட உள்ளது.
அமெரிக்காவில் அமேசான்
ஆன்லைன் சந்தையில் மகிப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வந்த அமேசான், அமெரிக்காவில் ரீடைல் ஸ்டோர் அறிமுகத்தில் அதிரடி ஆஃபர்களைக் கொடுத்து வாடிக்கையாளர்களை எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் அதிகரித்துக்கொண்டது.
இது அமெரிக்க நுகர்வோர் சந்தையில் ஒரு புரட்சியாகவே பார்க்கப்பட்டது.
இந்தியாவில்
அமெரிக்காவை விடவும் பெரிய சந்தையாக இருக்கும் இந்தியாவில், இதேதிட்டத்தை நிறைவேற்ற அமேசான் முடிவு செய்துள்ளது. இதற்காகப் படிப்படியாக நுகர்வோர் மற்றும் ரீடைல் சந்தைகளைக் கைப்பற்றி வருகிறது அமேசான்.
500 மில்லியன் டாலர்
ஆன்லைன் உணவு பொருட்கள் விற்பனைக்காகவும், ரீடைல் ஸ்டோர் விற்பனையைத் துவங்க அடித்தளம் அமைக்கவும் அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்த 5 வருடத்தில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது.
முதற்கட்ட திட்டம்..
அமேசான் இத்திட்டத்தின் முதற்கட்டமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பேகேஜ் பொருட்களை மூன்றாம் நபர்களிடம் இருந்து பெற்று தனது சொத்த பிராண்டு லேபில் மூலம் விற்பனைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இதற்காக அமேசான் பேன்ட்ரி என்ற பிரத்தியேக தளத்தை உருவாக்கியுள்ளது.
டெலிவரி
ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை அதேநாளில் டெலிவரி செய்ய அமேசான் நவ் செயலியை விரிவாக்குவது மட்டும் அல்லாமல் நாட்டின் சில முக்கிய இடங்களில் சேவையை முழுமையாகவும் சிறப்பாகவும் அளிக்கப் பிக் பஜார் மற்றும் ஹைப்பர்சிட்டி நிறுவனங்களுடன் கூட்டணி வைக்கிறது.