பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவான விஷால் சிக்காவின் ராஜினாமா இந்நிறுவனத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய ஐடி துறையை அதிரவைத்துள்ளது. பல எதிர்ப்புகள் மத்தியில் இன்போசிஸ் நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்டவர் தான் விஷால் சிக்கா நியமனத்தின் போது இந்நிறுவனத்தின் பல முக்கிய அதிகாரிகள் வெளியேறி மொத்த நிர்வாகமும் ஆட்டம்கண்டது.
இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்திய விஷால் சிக்கா வெறும் 3 வருடப் பணியில் இருந்து வெளியேறி தற்போது நேரடி நிர்வாகப் பணியில் இல்லாமல் துணை தலைவர் என்ற பதவிக்கு மாறியுள்ளார். இது விஷால் சிக்கா முழுமையாக நிறுவனத்தை விட்டு வெளியேறுவதற்கான அடித்தளம் என்பதை மறுக்க முடியாது.
இந்நிலையில் இன்போசிஸ் நிர்வாகம் பல முக்கியத் திறன் தேவைகளுடன் (requirements) புதிய சிஇஓவை தேடும் பணியில் குதிக்க உள்ளது.
திறன் தேவைகள்
2,00,000 ஊழியர்களை நிர்வகிக்கும் திறன், அவுட்சோர்சிங் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எதிர்கொள்ளும் திறன், நிர்வாகம் மற்றும் நிறுவனர் குழுவிற்கு மத்தியில் இருக்கும் பிரச்சனையைத் திறம்பட எதிர்கொள்ள வேண்டிய அனுபவம் ஆகியவை இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வின் முக்கியத் திறன் தேவையாக நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
முக்கியப் பிரச்சனை
இந்தியாவின் 2வது பெரிய மென்பொருள் ஏற்றுமதி செய்யும் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனமான இன்போசிஸ், தற்போது பல வர்த்தகப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
அதேபோல் மோசமான வர்த்தக வளர்ச்சி, ஆட்டோமேஷன் மூலம் ஊழியர்கள் மட்டத்திலும் நிர்வாகத்திலும் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், டிரம்ப் அரசால் அமெரிக்கச் சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் இன்போசிஸ் நிறுவனத்தைப் பெரிய அளவில் பாதித்து வருகிறது.
இவை அனைத்தையும் எதிர்கொள்ளும் ஒரு திறமையான ஒருவருக்குத் தான் அடுத்தச் சிஇஓ.
யாருக்கு வாய்ப்பு அதிகம்..?
தற்போது நிலையில், வெளியாட்களுக்கு இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது கடினம்.
காரணம் இன்போசிஸ் நிறுவனர்கள் அல்லாத ஒருவர் முதல் முறையாகச் சிஇஓவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஷால் சிக்கா. சிக்காவின் திறனில் குறைபாடு இல்லையென்றாலும், நிர்வாகக் குழுவிற்கும், நிறுவனர் குழுவிற்கும் இவர் நியமனம் மற்றும் நிர்வாகத்தில் பல பிரச்சனைகள் எழுந்ததுள்ளது.
ஆகவே இந்த முறை நிறுவனத்தில் இருக்கும் முக்கிய அதிகாரிகளுக்கு மட்டுமே அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. சர்வேதச முன்னணி டெக்னாலஜி நிறுவன தலைவர்களுக்கு இதில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
விஷால் சிக்கா
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் சயின்ஸ்-இல் டாக்டர் பட்டம் பெற்ற விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தில் சேரும் முன் எஸ்ஏபி என்னும் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்தார்.
பரிமாற்ற வளர்ச்சி
விஷால் சிக்கா நியமனத்திற்குப் பின்பு இன்போசிஸ் தனது ஆஸ்தான சேவைத்துறையில் இருந்து புதிய தொழில்நுட்பத்திற்கு மாறினாலும், 3 வருட நிர்வாகத்தில் இன்போசிஸ் வருவாய் 25 சதவீதம் அதிகரித்தது. பங்கு மதிப்பு 9.6 சதவீதம் அதிகரித்தது.
இணையான தலைவர்
இந்நிலையில் விஷால் சிக்காவிற்கு இணையான ஒருவரை தான் இன்போசிஸ் சிஇஓவாக நியமிக்க முடியும். அந்த வகையில் தற்போது இந்நிறுவனத்தில் இருக்கும் 4 முக்கியத் தலைவர்கள் இப்பதவிக்குப் போட்டி போட்டு வருகின்றனர். யார் அவர்கள்.
பிரவின் ராவ்
இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மற்றும் தற்காலிக சிஇஓவான் பிரவின் ராவ் இப்பதவிக்கு முக்கியத் தேர்வாக உள்ளார்.
ரங்கநாதன் டி.மவினகேரே
15 வருடங்களாக இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ரங்கநாதன் ஐஐடி கல்லூரியில் பட்டம் பெற்றவர். நாராயணமூர்த்தியில் 2வது சிஇஓ பணிக்காலத்தில் இவருடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றினார் ரங்கநாதன். ஆகவே நிர்வாகம் மற்றும் நிறுவனர்கள் குழுமத்தில் இருக்கும் பிரச்சனையை இவரால் எளிதில் சரி செய்ய முடியும்.
தற்போது இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியாக இருக்கும் ரங்கநாதன் கடந்த 3 வருட காலத்தில் 3 பில்லியன் டாலர் அளவில் பண இருப்பை உருவாக்கியுள்ளார். இவரும் இப்பதவிக்குப் போட்டி போடும் முக்கியமான அதிகாரி.
ரவி குமார்
இன்போசிஸ் நிறுவனத்தில் துணை தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் ரவி குமார்-ம் இப்பதவிக்குப் போட்டி போடும் முக்கிய அதிகாரி ஆவார்.
ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி
இன்போசிஸின் எனர்ஜி மற்றும் டெலிகாம் துறை வர்த்தகத்தைக் கவனித்துக்கொள்ளும் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தியும் சிஇஓ பதவிக்குப் போட்டி போட்டு வருகிறார்.
மோஹித் ஜோஷி
கடைசியாக இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவான வங்கித்துறை வர்த்தகத்தைக் கவனித்துக்கொள்ளும் மோஹித் ஜோஷி இப்பதவிக்கு முக்கிய அதிகாரி.
தற்போதைய நிலையில் இந்த 5 முக்கிய அதிகாரிகள் மட்டும் சிஇஓ பதவிக்குப் போட்டி போட்டு வருகிறார்கள்.
நிறுவனர் மட்ட முக்கியத் தலைகள்
மேலும் இன்போசிஸ் நிறுவனம் தனது பழைய வர்த்தக முறையைக் கடைப்பிடித்தால் இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் புதிய சிஇஓவாக நியமிக்கப்படலாம்.
இதில் நந்தன் நீலகேனி மற்றும் மோகன்தாஸ் பாய் ஆகியோர் இதற்கு முக்கியத் தேர்வாக உள்ளனர்.