மெக்டொனால்டு நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் செப்டம்பர் 6 முதல் கொனாட் பிளாஸா ரெஸ்டாரண்ட் லிமிடெட் (CPRL) நிறுவனத்தின் கீழ் வட மாநிலங்கள் மற்றும் கிழக்கு மாநிலங்களில் இருந்த 169 மெக்டொனால்டு கடைகளில் தங்களது பிராண்டு பெயர் மற்றும் டிரேடு மார்க்குகள் போன்றவற்றைப் பயன்படுத்த பொருட்களை விற்க அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.
மெக்டொனால்டு மற்றும் கொனாட் பிளாஸா ரெஸ்டாரண்ட் லிமிடெட் நிறுவனங்கள் இடையில் இருந்த ஒப்பந்தம் செப்டம்பர் 5-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மெக்டொனால்டு பெயரை எங்கும் பயன்படுத்தக் கூடாது
அதனால் பிளாஸா ரெஸ்டாரண்ட் லிமிடெட் நிறுவனம் மெக்டொனால்டு பெயர், டிரேடு மார்க், பிராண்டு, செயல்பாடுகள், விற்பனை உத்தி மற்றும் பாலிசகள், உணவுகள் மற்றும் குறிப்புகள் உள்ளிட்டவற்றை எங்கும் பயன்படுத்தவும் கூடாது.
ஒப்பந்தங்கள் ரத்து
எங்களது சட்ட மற்றும் ஒப்பந்த உரிமைகளின் படி கொனாட் பிளாஸா ரெஸ்டாரண்ட் லிமிடெட் நிறுவனத்திற்கு மெக்டொனால்டு உடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் எல்லாம் ரத்துச் செய்யப்படுகின்றது என்று நிறுவனத்தின் இந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வழக்கு
மெக்டொனால்டு நிறுவனத்தின் இந்த நடவடிக்கை செல்லது என்று கொனாட் பிளாஸா ரெஸ்டாரண்ட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் விக்ரம் பாக்ஷி தேசிய கம்பனி சட்டம் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கும் செவ்வாய்க்கிழமை நிராகரிக்கபட்டுவிட்டது.
சந்தேகம்
பாக்ஷி கட்டுப்பாட்டில் இருக்கும் கடைகள் எல்லாம் புதன்கிழமை முதல் இயங்குமா அல்லது மூடப்படுமா என்று என்று எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால் இது குறித்துப் பாக்ஷி தொடர்ந்து தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் முறையிட்டு வருவதாக மட்டும் தெரிவித்தார்.
வாழ்வாதாரம் பாதிப்பு
169 கடைகளை மூடுவதால் நிறுவனத்தின் சப்ளையர்கள் மற்றும் பிற வணிக ஊழியர்கள் என 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று பாக்ஷி தரப்புக் கூறுகின்றது.
50:50 ஒப்பந்தம்
கொனாட் பிளாஸா ரெஸ்டாரண்ட் லிமிடெட், மெக்டொனால்டு இரண்டு நிறுவனங்கள் இடையிலும் 50:50 ஒப்பந்த இணைவாகத் தான் வட இந்தியா மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களில் கடைகள் திறக்கப்பட்டுப் பல வருடங்களாக இயங்கி வருகின்றது.
திடீர் அறிவிப்பு
ஆனால் திடீர் என்று அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மெக்டொனால்டு ஆகஸ்ட் 21-ம் தேதி 15 நாட்களில் ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படுகின்றது என்று பாக்ஷிக்குத் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டிஎல்எப்
அதே நேரம் மெக்டொனால்டு நிறுவனம் ஒப்பந்தத்தினை ரத்து செய்ததை அடுத்து ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எப் கடைகளை முழுமையாகக் காலி செய்து எங்களிடம் திருப்பி ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பிராண்டு பெயர் இல்லாததால் இவர்களுக்கு லீஸ் மற்றும் வாடகைக்கு அளித்த கடைகளைத் திரும்பப்பெறுவதாகவும் அவற்றை வேறு ஒருவருக்கு அளிக்க இருப்பதாகவும் டிஎல்எப் தரப்பு கூறியுள்ளது.
169 கடைகள்
மூடப்படும் 169 கடைகளில் சில மற்றும் தான் பாக்ஷி கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் பிற கடைகள் எல்லாம் லீசாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 169 கடைகளில் ஏற்கனவே 43 கடைகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே மூடப்பட்டுள்ளன.
பாக்ஷி குமுறல்
அமெரிக்க நிறுவனத்திற்கு எதிராகத் தான் மீண்டும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளதாகவும் இதற்கு அவர்கள் தக்க பதில் அளிக்க வேண்டும் என்றும் பாக்ஷி கூறினார்.
எப்போது பிரச்சனை துவங்கியது
முதன் முறையாக மெக்டொனால்டு மற்றும் பாக்ஷி இடையில் 2013-ம் ஆண்டில் தான் பிரச்சனை எழுந்தது. அப்போது கொனாட் பிளாஸா ரெஸ்டாரண்ட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த பாக்ஷி பல நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி வெளியேறினார்.
மீண்டும் இணைந்த உடன் ரத்துச் செய்யப்பட்ட ஒப்பந்தம்
மீண்டும் 2017 ஜூலை மாதம் கொனாட் பிளாஸா ரெஸ்டாரண்ட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியைப் பாக்ஷி பிடித்தார். இவர் நிறுவனத்தில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் ஒப்பந்தத்தினைப் பாக்ஷி மீறியதாக மெக்டொனால்டு நிறுவனம் குற்றம்சாட்டி ஒப்பந்தத்தினை ரத்து செய்துள்ளது.