மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி இரட்டிப்பாக்குவதற்கான பணிகளைத் துவங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கான மசோதாவிற்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இரட்டை வரி விலக்குடன் தற்போது வழங்கப்பட்டு வரும் கிராஜுவிட்டி தொகையானது 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
மேலும் மத்திய அரசு கிராஜுவிட்டி திருத்த சட்டம் 2017-ஐ அறிமுகம் செய்கின்றது. பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான அமைச்சக குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
எனவே இது குறித்த முழு விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.
கிராஜுவிட்டி என்றால் என்ன?
கிராஜுவிட்டி என்றால் ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் அந்நிறுவனத்தால் பணி ஓய்வின் போது அளிப்பதாகும். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஏதேனும் காரணங்களுக்காகப் பணி ஓய்வு பெறலாம். அப்போது அந்த ஊழியர் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேலாகப் பணி புரிந்திருந்தால் வருமான வரி சட்டத்தின் படி நிறுவனம் கிராஜுவிட்டி அளிக்க வேண்டும்.
வரி விலக்குடன் கிராஜுவிட்டி
கிராஜுவிட்டி சட்டம் திருத்தம் செய்யப்படுவதன் மூலம் முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்குடன் கிராஜுவிட்டி தொகை வழங்கப்படும்.
எந்த நிறுவனங்கள்
ஒரு நிறுவனத்தில் 10க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரியும் போது இந்தக் கிராஜுவிட்டி சட்டம் பொருந்தும்.
கிராஜுவிட்டி கணக்கிடுதல்
ஊழியர் ஒருவர் பணி செய்த மொத்த ஆண்டிற்கும் அரை மாத ஊதியம் விதம் எனக் குறைந்தபட்சம் இரண்டரை மாத ஊதியம் முதல் அதிகபட்சமாகப் பதினாறரை மாத ஊதியம் கிராஜுவிட்டியாக வழங்கப்படும்.
அரசுத் துறையில் கிராஜுவிட்டி
அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது ஊழியர்களுக்கு அவரின் பணியைப் பாராட்டும் விதமாக ஒரு ஒட்டுமொத்த தொகையைக் கிராஜூவிட்டியாக வழங்கப்படும்.
இந்தக் கிராஜுவிட்டி தொகையின் அதிகபட்ச வரம்பாக ரூ.10 லட்சம் என்று இருந்தது. இப்போது 7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி 20 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையே தனியார் நிறுவன ஊழியர்களும் பெற உள்ளார்கள்.
பணியின் போது காலமானால்
பணியில் சேர்ந்த ஓர் ஆண்டில் காலமான ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச பணிக்காலம் கணக்கிடப்படாமல் இரண்டு மாத சம்பளமும், ஒன்று முதல் ஐந்து ஆண்டிற்குள் இறந்தால் 6 மாத சம்பளமும், 5 முதல் 20 ஆண்டுப் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு 12 மாத சம்பளமும், 20 வருடத்திற்கும் மேலாகப் பணியில் இருந்த ஊழியர்களுக்கு ஆண்டுக்கு அரை மாத சம்பளமும் கணக்கிடப்பட்டுக் கிராஜுவிட்டி வழங்க வேண்டும்.
அகவிலைப்படி
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு 1 சதவீதம் உயர்த்தி 5 சதவீதமாக அரசு அறிவித்துள்ளது. அதே நேரம் மத்திய அரசு அகவிலை நிவாரணத் தொகையினையும் 1 சதவீதம் உயர்த்தி 4 சதவீதமாக அறிவித்துள்ளது.
எவ்வளவு பேருக்கு நன்மை?
மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவால் 49.26 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61.17 லட்ச ஓய்வூதியதார்கள் பயன்பெறுவார்கள்.
ஊழியர்கள் சங்க கோரிக்கை
ஊழியர் சங்கங்கள் கிராஜுவிட்டி பெறுவதற்கு 5 வருடம் பணிபுரிய வேண்டும் என்று உள்ள வரம்பை 3 வருடமாகக் குறைக்க கோரிக்கை வைத்துள்ளது.