சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கு அடுத்தபடியாக நாட்டின் 2வது பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி வருகிற 2018ஆம் ஆண்டுக்குள் 1.55 லட்ச தபால் நிலையங்கள் மற்றும் தற்போது இருக்கும் 3 லட்ச ஊழியர்களுடன் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி துவங்க உள்ளது.
மார்ச் 2018
2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் போஸ்ட் பேங்க் விரிவாக்கம் செய்யப்படும், அதுமட்டும் அல்லாமல் தற்போது இந்தியா போஸ்ட்-இல் இருக்கும் 1.55 தபால் நிலையங்கள், போஸ்ட்மேன் மற்றும் கிராமின் டக் சேவாவில் இருக்கும் அனைவரின் கையிலும் பணப் பரிமாற்றம் செய்ய உதவும் கருவி இருக்கும் என இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி சிஇஓ ஏபி சிங் தெரிவித்தார்.
1 லட்சம் ரூபாய்
பேமெண்ட் வங்கிகள் ஒரு கணக்கிற்கு 1 லட்சம் ரூபாய் வரையிலான வைப்பு நிதியைப் பெறுகிறது. இது தனிநபர் அல்லது சிறு வர்த்தகர்களாகவும் இருக்கலாம், ஆனால் இரு தரப்பினருக்கும் ஓரே அளவீடு தான்.
வட்டி விகிதங்கள்
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி ( IPPB) 25,000 ரூபாய் வரையிலான வைப்புக்கு 4.5 சதவீத வட்டியும், 25,000 முதல் 50,000 ரூபாய் வரையிலான வைப்புக்கு 5 சதவீத வட்டியும், 50,000 முதல் 1,00,000 ரூபாய் வரையிலான வைப்புக்கு 5.5 சதவீத வட்டியை அளிக்கிறது.
எஸ்பிஐ
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் சேவைகள் அனைத்தும் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கு இணையான ஒன்றாக இருக்கும் என ஏபி சிங் தெரிவித்தார்.
கிராமப்புற மக்கள்
இதுமட்டும் அல்லாமல் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி அறிமுகத்தின் மூலம் நாட்டில் கிராமப்புறம் மற்றும் சிற டவுன் பகுதிகளில் இருக்கும் மக்கள் டிஜிட்டல் பணம் பரிமாற்றம் செய்யத் துவங்குவார்கள்.
1 பைசா
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி அளிக்கும் பணப் பரிமாற்றத்திற்கு ஆதார் எண்ணை அடையாளமாகக் கொண்டு ஒரு பரிமாற்றத்திற்கு 1 பைசா கட்டணமாகக் கொண்டு பணத்தைப் பரிமாற்றம் செய்யப்பட உள்ளது.
பரிமாற்ற கட்டணங்கள்
சந்தையில் தற்போது தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்திற்கு அதிகளவிலான கட்டணத்தை விதித்து வரும் போது, இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி 1 பைசாவில் இச்சேவையை அளிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.
இது உண்மையிலேயே பிற வங்கிகளின் பணப் பரிமாற்றத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் அனைத்து வங்கி மற்றும் பேமெண்ட் வங்கிகள் கட்டணத்தைக் குறைக்கவும் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்டெல்
இவ்வாண்டின் துவக்கத்தில் தனியார் நிறுவனமான பார்தி ஏர்டெல், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியை சுமார் 2.5 லட்ச வர்த்தகர்களுடன் திறந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பேடிஎம் நிறுவனமும் தனது பேமெண்ட்ஸ் சேவையை அளிக்கத் துவங்கியது.