இந்தியாவின் பெரு நகரங்களில் லாஜிஸ்டிக்ஸ் சேவை அளிக்கும் ரன்னர் நிறுவனத்தை உணவு டெலிவரி மற்றும் ஆன்லைன் ஹோட்டல் நிறுவனமான சோமேட்டோ கைப்பற்றியுள்ளது.
இந்தக் கைப்பற்றுதலில் சீன நிறுவனமான அலிபாபாவின் திருவிளையாடல் மிகப்பெரிய அளவில் உள்ளது.
தீபன்தர் கோயல்
சோமேட்டோ-வின் ரன்னர் நிறுவன கைப்பற்றுதலை சோமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான தீபன்தர் கோயல் இந்நிறுவன வலைத்தளத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தார்.
விரிவாக்கம்
இந்நிறுவன கைப்பற்றுதல் மூலம் சோமேட்டோவின் உணவு டெலிவரி சேவை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் புதிய பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யவும் முடியும் எனக் கோயல் தெரிவித்தார்.
மோஹித்
ரன்னர் நிறுவனத்தின் கைப்பற்றுதலுக்குப் பின்னரும், இந்நிறுவனத்தின் தற்போதைய நிறுவனரான மோஹித் தொடர்ந்து நிறுவனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருப்பார்.
முக்கிய அணி
இதேபோல் இவரது அணியில் இருக்கும் அர்பீத், முகுந்தா, கனேஷ், வட்சால் மற்றும் அரவிந்த் ஆகியோர் தொடர்ந்து ரன்னர் நிறுவனத்தில் இதே அணியில் பணியாற்றுவார்கள்.
இணைந்து செயல்படும்..
சோமேட்டோ நிறுவனத்தின் கைப்பற்றுதல் மூலம், இரு நிறுவனங்களும் தனித்தனியாக இயங்கினாலும், இணைந்து செயல்படும். இதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் கூடுதல் வர்த்தகம் கிடைக்கும்.
லாஜிஸ்டிக்ஸ்
ரன்னர் நிறுவனம் தற்போது உணவு டெலிவரியில் மட்டுமே தற்போது இயங்கி வரும் நிலையில், சோமேட்டோ நிறுவனத்தின் கைப்பற்றுதலுக்குப் பின்னர்ப் பார்மா, மளிகை பொருட்கள், ஈகாமர்ஸ், எனப் பல துறையில் பணியாற்ற உள்ளது.
அலிபாபா
சமீபத்தில் அலிபாபா நிறுவனம் சோமேட்டோ நிறுவனத்தில் சுமார் 200 மில்லியன் டாலர் முதலீடு செய்து அதிகளவிலான பங்குகளைக் கைப்பற்றியது.
சீனாவின் ஒட்டுமொத்த ஈகாமர்ஸ் சந்தையைத் தனது கைகளுக்குள் வைத்திருக்கும் அலிபாபா, இந்தியாவில் பேடிஎம் நிறுவனத்தில் செய்த அதிகளவிலான முதலீடு மூலம் ஆன்லைன் பேமென்ட், ரீசார்ஜ் மற்றும் ஈகாமர்ஸ் சந்தையில் இறங்கியது. இதைதொடர்ந்து சோமேட்டோ நிறுவனத்தின் முதலீட்டு மூலம் தற்போது உணவு டெலிவரி சந்தையிலும் இறங்கியுள்ளது.
திருவிளையாடல்..
பேடிஎம் தீபாவளிக்காக 1,000 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை அளிக்க அலிபாபா ரன்னர் நிறுவனத்தைப் பயன்படுத்த உள்ளது.
ஆக அலிபாபா நிறுவனம் மறைமுகமாகப் பேடிஎம், சோமேட்டோ, ரன்னர் நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.