டெல்லி: இந்திய வங்கித்துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதைப் போல, தற்போது டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிகவேகமாக வளர்ந்து வரும் இந்திய டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவையில் தானும் பங்குபெற வேண்டும் எனத் திட்டமிட்ட கூகிள், புதிய யூபிஐ செயலியை அடுத்தச் சில நாட்களில் அறிமுகம் செய்ய உள்ளது.
Tez செயலி
ஆல்பெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக இருக்கும் கூகிள் நிறுவனம் வருகிற செப்டம்ர் 18ஆம் தேதி Tez என்னும் யூபிஐ செயலியை அறிமுகம் செய்து, வளர்ந்து வரும் இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் சந்தையில் இறங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஆண்ட்ராய்டு
தேஜ் என்றால் ஹிந்தியில் வேகம் எனப் பொருள். கூகிள் அறிமுகம் செய்ய உள்ள இந்தப் பேமெண்ட் செயலி, ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கக்கூடியவை எனக் கூகிள் தெரிவித்துள்ளது.
யூபிஐ
மொபைல் தளத்தில் இருந்து இரு வங்கிகளுக்கு மத்தியில் பணப் பரிமாற்றம் செய்ய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருக்கும் நேஷ்னல் பேமெண்ட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) யூபிஐ செயலியை அறிமுகம் செய்தது.
இதனைப் பயன்படுத்தி இந்தியாவில் இருக்கும் அனைத்து முன்னணி வங்கிகளும் இச்சேவையைத் தற்போது அளிக்கும் நிலையில், பன்னாட்டு நிறுவனமான கூகிள் இச்சேவையைத் தற்போது அளிக்க முடிவு செய்துள்ளது.
வாட்ஸ்அப்
அதுமட்டும் அல்லாமல் கூகிள் நிறுவனத்துடன் போட்டிபோடும் வகையில், பேஸ்புக் கட்டுப்பாட்டில் இருக்கும் வாட்ஸ்அப் நிறுவனமும் யூபிஐ செயலி மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்ற சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
பிற நிறுவனம்
மெசேஜிங் சேவை அளிக்கும் வீசேட் மற்றும் ஹைக் மெசேஜ்சர் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே யூபிஐ செயலி வழியான பணப் பரிமாற்ற சேவையை வழங்கும் நிலையில் தற்போது வாஸ்ட்அப் நிறுவனமும் இதன் வரிசையில் இறங்க உள்ளது.