9,000 கோடி ரூபாய் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தும் முயற்சியில் இந்தியாவின் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையும் முழு வீச்சாக ஈடுபட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக இவர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது வாங்கிய 6,027 கோடி ரூபாய் கடனை என்ன செய்தார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.
9,000 கோடி ரூபாய் மோசடி
கிங்பிஷர் நிறுவனத்தின் தலைவரான விஜய் மல்லையாவுக்கு வயது 61, இவர் இந்தியாவின் பல முக்கிய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் வரை மோசடியாகக் கடன் பெற்று அவற்றைச் செலுத்தாமல் இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார்.
எஸ்பிஐ
இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ மற்றும் பிற வங்கிகளில் இருந்து பெற்ற 6,000 கோடி ரூபாய் கடனை போலி நிறுவனங்களை உறுவாக்கி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்குப் பணத்தினைக் கடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
போலி நிறுவனங்கள்
போலி நிறுவனங்களின் பெயரில் 7 நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தின் வங்கி கணக்கு விவரங்கள் குறித்து விசாரணையைத் தற்போது சிபிஐ மேற்கொண்டு வருகின்றது.
சிபிஐ கோரிக்கை
மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் அதிகாரிகளிடம் இது குறித்து விவரங்களை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது சிபிஐ.
நடிப்பு
தான் பெற்ற சில கடனை அடைப்பது போன்று கணக்கு காண்பித்து வங்கிகளிடம் மோசடியாக மதிப்புக்கூட்டப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்துக் கூடுதலாகக் கடன் பெற்று மோசடியில் விஜய் மல்லையா ஈடுபட்டுள்ளார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
லண்டன் நீதிமன்றம்
தற்போதைய ஆதாரங்கள் லண்டன் நீதிமன்றத்திற்கு முன் சமர்ப்பிக்கப்பட உள்ளன, அங்கு இந்தியாவில் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள மல்லையாவை ஒப்படைக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
சொத்துக்கள் பறிமுதல் முயற்சிகள்
மல்லையாவுக்குச் சொந்தமான 11,000 கோடி சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 9,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முன்பே பணம் திருட்டுத் தடுப்பு சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.
செபி
அன்மையில் செபி யூபிஎல் நிறுவனத்தில் இவரது பங்காக இருந்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைப் பரிமுதல் செய்து அமலாக்கத் துறையிடம் ஒப்படைத்து.
ஜாமின்
மார்ச் 2016-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த விஜய் மல்லையா 2017 ஏப்ரல் 18-ம் தேதி கைது செய்யப்பட்டு அன்றே ஜாமின் பெற்று வெளியேறினார்.
இந்தியா - இங்கிலாந்து - ஒப்பந்தம்
இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே 1992 ஆம் ஆண்டு ஒப்படைப்பு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டு நவம்பர் 1993 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் இன்று வரை லலித் மோடி, விஜய மல்லையா உள்ளிட்டவர்கள் இன்று வரை அங்குத் தான் தஞ்சம் அடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நேரத்துல 'இது' முக்கியமா..
கடன் நெருக்கடியால் நாட்டை விட்டு ஓடிப்போன சூழ்நிலையிலும், ஒவ்வொரும் வருடமும் வெளியிடும் kingfisher calendar-ஐ இந்த வருடமும் வெளியிட்டார் விஜய் மல்லையா.