புதன்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 மாத சரிவை சந்தித்துள்ளது 65.72 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்திய சந்தையில் இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் மத்தியில் டாலரின் தேவை அதிகமாக இருக்கும் காரணத்தால் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.
டாலர் தட்டுப்பாடு
இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் பன்னாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் செய்துள்ள டாலர் முதலீடுகளை அதிகளவில் திரும்பப்பெற்று வருவதால், தற்போது இந்திய சந்தையில் இதன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
இந்திய பொருளாதார வளர்ச்சி ஜூன் காலாண்டில் வெறும் 5.7 சதவீதம் மட்டுமே பதிவு செய்து 3 வருடச் சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில் 6.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
50,000 கோடி ரூபாய்
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு சுமார் 50,000 கோடி ரூபாயை கூடுதலாகச் செலவிட முடிவு செய்துள்ளது. இந்தக் கூடுதல் செலவீட்டு திட்டத்தின் மூலம் பொருளாதாரச் சரிவைக் குறைக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
நிதிப்பற்றாக்குறை
ஆனால் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தக் கூடுதல் செலவீட்டு திட்டத்தின் மூலம் இந்திய அரசுக்கு அதிகளவிலான நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டும் என்ற கருத்து நிலவி வரும் காரணத்தால், முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் செய்துள்ள முதலீட்டை திரும்ப எடுத்து வருவது மட்டுமல்லாமல், புதிய முதலீட்டு அளவுகளையும் குறைத்து வருகின்றனர்.
இறக்குமதி
இதனுடன் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை, முதலீட்டாளர்களை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளியுள்ளது. 50,000 கோடி ரூபாய் மட்டுமே நிதிப்பற்றாக்குறை பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்த்த நிலையில் ஜூன் காலாண்டியே இந்தியாவில் இறக்குமதியின் அளவு அதிகரித்து 41.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
பங்கு விற்பனை
அடுத்தடுத்த வரும் அறிவிப்புகளால் துவண்டுபோன் பன்னாட்டு முதலீட்டாளர்கள், செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 5,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து தங்களது முதலீட்டை திரும்பப்பெற்றுள்ளனர்.