நாணய கொள்கை முடிவுகள் விரைவில் வெளியிட இருக்கும் நிலையில் மத்திய அரசு சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான அக்டோபர்- டிசம்பர் மாத காலாண்டின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எனவே 2017-2018 நிதி ஆண்டிற்கான மூன்றாவது காலாண்டு அக்டோபர் முதல் துவங்க இருக்கும் நிலையில் இரண்டாம் காலாண்டின் வட்டி விகிதமே தொடரும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஒவ்வொரு காலாண்டும் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது. இந்திய ரிசர்வ் வங்கி நாணய கொள்கை கூட்ட அறிவிப்பினை வருகின்ற அக்டோபர் 4-ம் தேதி நடைபெற இருக்கின்றது.
எனவே இப்போது சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் எவ்வளவு என்று விளக்கமாக இங்குப் பார்ப்போம்.
பொது வருங்கால வைப்பு நிதி
பொது வருங்கால வைப்பு நிதி திட்டமான பிபிஎப்-ல் முதலீடு செய்பவர்களுக்கு 7.8 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.
கிசான் விகாஸ் பத்ரா
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு 7.5 சதவீத லாபத்தினை அளிக்கும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்குத் திட்டம்
பெண் குழந்தைகளுக்கான சிறு சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனாவில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 8.3 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் என்பது 8.3 சதவீத வட்டி விகிதத்தில் லாபம் அளிக்கின்றது.
வட்டி விகிதம் எப்படி முடிவு செய்யப்படுகின்றது?
அரசு பத்திரங்கள் மீதான லாபம் ஒவ்வொரு காலாண்டும் எவ்வளவு லாபம் அளிக்கப்படுகின்றதோ அதனைப் பொருத்து சிறு சேமிப்பு மீதான வட்டி விகிதம் முடிவு செய்யப்படுகின்றது.