இந்தியாவில் அமலாக்கம் செய்யப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியின் மூலம் ஏற்பட்ட அமைப்பு மாற்றத்தில் இருக்கும் பிரச்சனைகளைக் களையவும், வர்த்தகர்களுக்கும் வர்த்தகச் சந்தைக்கும் ஏற்ற வகையில் விதிமுறைகளை இன்று நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கிய கூட்டத்தில் மாற்றி அமைக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
2 நாள் முன்பு மோடி ஜிஎஸ்டியில் இருக்கும் பிரச்சனைகளை முழுமையாகவும் விரைவாகவும் களையப்படும் என உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நடக்கும் கூட்டத்தில் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் முதல் சாமானியர்கள் வரை கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
வரி தாக்கல்..
சிறு, குறு வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஒவ்வொரு மாதமும் 3 ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யப்படுவதில் இருந்து சில விதிமுறை தளர்வுகளை ஜிஎஸ்டி கவுன்சில் அறிவிக்கும் எனத் தெரிகிறது. அதுமட்டும் அல்லாமல் 1.5 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட வர்த்தகங்கள் காலாண்டு வாரியான அறிக்கையைத் தாக்கல் செய்தால் போதும் என் ஜிஎஸ்டி அமைப்பு அறிவிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
நிலையான வரி
75 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட சிறு வியாபாரிகள் composition scheme கீழ் நிலையான வரியை செலுத்த வேண்டியுள்ளது. இதன் அளவீட்டை ஜிஎஸ்டி உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்காலிக தடை..
தற்போது நடைமுறையில் உள்ள ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம், ஜிஎஸ்டி பதிவு செய்யாத வியாபாரிகள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி மாற்றம்..
மாநில அரசு மற்றும் மத்திய அரசின் இணைந்து ஆலோசித்து இன்றைய ஜிஎஸ்டி அமைப்பின் கூட்டத்தில் டெக்ஸ்டைல் மற்றும் இதர பொருட்கள் மீதான வரியைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர்களுக்குத் தளர்வு..
வொர்கிங் கேபிடல் பணத்தை விடுவிக்கும் வகையில் ஏற்றுமதியாளர்களுக்குச் சில முக்கியத் தகவல்களை மத்திய அரசு அறிவிக்க உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் வரியை செலுத்த மின்னணு பணப் பரிமாற்றத்தையும் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்க ஜிஎஸ்டி கவுன்சில் அறிவிக்கும் என ஏற்றுமதியாளர்கள் மத்தியில் ஏதிர்பார்ப்பு நிலவுகிறது.
உற்பத்தி துறை
ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் உற்பத்தி துறை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ள நிலையில், இத்துறையை ஊக்குவிக்கச் சில முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.
வர்த்தகச் சந்தை
ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பால் வர்த்தகச் சந்தை அதிகளவில் பாதித்து நாட்டின் பொருளாதாரமே குறைந்துள்ள நிலையில், வர்த்தகத்தை எளிமையாக வியாபாரிகள் மத்தியில் வர்த்தகத்தை எளிமைப்படுத்தவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கும் எனத் தெரிகிறது.