இந்தியா முழுவதும் உள்ள 54,000 பெட்ரோல் நிலையங்களும் அக்டோபர் 13ம் தேதி நள்ளிரவு முதல் 24 மணி நேர வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகப் பெட்ரோல் டீலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தத் தேசிய அளவிலான வேலை நிறுத்த போராட்டம் பெட்ரோல், டீசல் மீது அதிக மார்ஜின் லாபம் வழங்க வேண்டும், பெட்ரோலியம் பொருட்களைச் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி கீழ் கொண்டு வர வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கையாக இந்தப் போராட்டம் நடைபெறுகின்றது.
டீலர்கள்
அனைத்து இந்திய பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஒரு நாள் வேலை நிறுத்த போராட்த்த்தில் 54,000 டீலர்கள் பங்கேற்க உள்ளனர்.
காலவரையின்றி வேலை நிறுத்தம்
பெட்ரோல் விற்பனையாளர் சங்கத்தின் இந்தக் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்படவில்லை என்றால் அக்டோபர் 27 முதல் காலவரையின்றிப் பெட்ரோல் விற்பனை மற்றும் வாங்குவதை நிறுத்துவோம் என்றும் கூறியுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகள்
பெட்ரோலிய பொருட்கள் விற்பனையாளர்கள் சங்கம் டீலர்களின் விற்பனை மார்ஜினை 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் முதலீட்டிற்குத் திரும்புவதற்கு ஏற்ற விதிகள், மனிதவள பிரச்சினைகள் தொடர்பான தீர்மானம், இழப்புக்களைக் கையாள்வதற்கான ஒரு புதிய ஆய்வு, போக்குவரத்து மற்றும் எத்தனால் கலத்தல் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு கொண்டு வர வேண்டும் போன்றவற்றை முன்வைத்துள்ளனர்.
செவி சாய்க்காத மத்திய அரசு
இதுகுறித்து ஏற்கனவே எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்திடம் ஜூன் 28-ம் தேதியே கோரிக்கை வைத்ததாகவும் ஆனால் இது குறித்த எந்த முடிவுகளையும் அரசு எடுக்காததே போராட்டத்தில் இறங்குவதற்கான காரணம் என்றும் கூறியுள்ளனர்.
கலால் வரிக் குறைப்பு
கடந்த மூன்று மாதங்களாகப் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறிவந்த நிலையில் மத்திய அரசு ஒரு வாரத்திற்கு முன்பு கலால் வரியைக் குறைத்ததினால் 2 ரூபாய் வரை விலை குறைந்தன.
ஜிஎஸ்டி
பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் பெட்ரோலியம் மற்றும் டீசல் போன்றவற்றை ஜிஎஸ்டி வரி ஆட்சி முறைக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினம் விலை மாற்றும் முறை
பெட்ரோலிய மற்றும் டீசல் விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைத் தினமும் விலை மாற்றி அமைக்கும் முறை பெரிய அளவில் பாதித்துள்ளதால் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு டெலிவரி
மேலும் டீலர்கள் பெட்ரோலை வீட்டிற்குச் சென்று டெலிவரி செய்வதில் பலவிதமான பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளது என்றும் இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்றும் இந்த முடிவினை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.