சர்வதேச நாணய நிதி அமைப்பு 2018ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி அளவைத் தொடர்ந்து குறைத்து வருகிறது. இந்தத் தொடர் பொருளாதாரச் சரிவிற்கு மத்திய அரசு அறிவித்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் முக்கியக் காரணியாக விளங்குகிறது எனச் சர்வதேச நாணய நிதி அமைப்பு (IMF) தெரிவித்துள்ளது.
ஆனால் நீண்டகால அடிப்படையில் இந்தியாவிற்கு இது கண்டிப்பாக உதவும், அதனுடன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்ற பெயரை சீனாவிடம் இருந்து மீண்டும் பெறும் எனத் தெரிவித்துள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சி
2018ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி கணிப்பை ஐஎம்எப் 7.2 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இதேபோல் 2019ஆம் ஆம் நிதியாண்டில் இது 7.4 சதவீதம் வரையிலான வளர்ச்சியை மட்டுமே பெறும் என்று தனது முந்தைய கணிப்பு அளவீடுகளான 7.7 சதவீதத்தில் இருந்து குறைத்துள்ளது.
சீனா
வேகமாக வளர்ந்து வரும் நாடு என்ற முக்கியமான அந்தஸ்தை இந்தியாவிடம் இருந்து சீனா சில மாதங்களுக்கு முன்பு பறித்துக்கொண்ட நிலையில், 2018ஆம் ஆண்டில் சீனா 6.8 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
மீண்டும் பெறும்..
இந்நிலையில் ஐஎம்எப் ஆய்வின் படி 2019ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் சீனாவிட அதிகமான வளர்ச்சியைப் பெற்றும் மீண்டும் உலகின் வேகமாக வளரும் நாடாக உருவாகும் எனத் தெரிவித்துள்ளது.
ஐஎம்எப் கணிப்பின் படி 2019ஆம் நிதியாண்டில் சீனாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனவும் இந்தியாவில் வளர்ச்சி இக்காலத்தில் 7.4 சதவீதம் வரையில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
ஜூன் காலாண்டு
மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கத்தை முழுமையாகக் கணிக்காமல் ஜிஎஸ்டியை அமலாக்கம் செய்த காரணத்தால் ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3 வருட சரிவை சந்தித்து 5.7 சதவீதம் என்ற நிலையை அடைந்துள்ளது.
இது நடப்பு நிதியாண்டின் வளர்ச்சியை மிகப்பெரிய வளர்ச்சியை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது.
உலக வங்கி
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி அளவை 7.2 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி
கடந்த வாரம் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாணய கொள்கை கூட்டத்தின் அறிக்கையில் நாட்டின் வளர்ச்சி அளவீட்டை 7.3 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.