நாடே விழாக்கோலம் பூண்டிருக்கும் இச்சமயத்தில், நம்மில் பெரும்பாலானோர் தீபாவளியின் போது வாங்க வேண்டிய பொருட்களை பட்டியலிட்டுக் கொண்டிருப்போம்.
பெரும்பாலானோரின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தங்கமாகவே இருக்கிறது. ஏனெனில், தீபாவளியின் போது, முக்கியமாக தீபாவளி விழாவின் முதல் நாளான தந்தேராஸ் அன்று, தங்கம் வாங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. வடஇந்தியாவில் மிக முக்கியமாக கருதப்படும் தந்தேராஸ் பண்டிகை தற்போது தென் இந்தியாவில் பரவி வருகிறது. இந்நாளில் மக்கள் தங்கத்தை ஆபரணங்களாக மட்டுமின்றி நாணயங்களாகவும் வாங்குவர்.
தங்க நாணயங்கள் வாங்க விரும்புவோர் கட்டாயமாக அறிந்து கொள்ள வேண்டிய முக்கியாமான விஷயங்கள் பின்வருமாறு.
தங்க நாணயங்களின் சுத்தம்
தங்க நாணயங்கள் சுத்தமான தங்கத்தில் செய்யபட்டுள்ளனவா என்பதை கேரட் மற்றும் அதன் செம்மைத்தரம் (ஃபைன்னெஸ்) ஆகிய இரு அளவீடுகளைக் கொண்டு அளவிடலாம். பொதுவாக தங்கத்தின் சுத்தத்தை அளவிட கேரட் அளவீடே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
24/24 பகுதிகளை தங்கமாகக் கொண்டிருக்கும் 24 கேரட் (KT) தங்கம் மிகவும் சுத்தமான தங்கமாகக் கருதப்படுகிறது. 22 கேரட் தங்கம், 22 பகுதிகளை தங்கமாகவும், மீதமுள்ள 2 பகுதிகளை ஸிங்க் அல்லது வெள்ளி போன்ற பிற உலோகங்களாகவும் கொண்டிருப்பதனால் நீண்ட நாட்கள் உழைக்கும். அதனால், இதுவே ஆபரணங்கள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.
செம்மைத் தரம்
செம்மைத்தரம் (ஃபைன்னெஸ்) என்ற மற்றொரு அளவீடு, தங்கத்தின் சுத்தத்தை, முக்கியமாக 24 கேரட் தங்கத்தின் சுத்தத்தை அளவிடுவதற்கு உபயோகிக்கப்படுகிறது. வேர்ல்டு கோல்டு கவுன்சிலின் வலைத்தளத்தின் படி, சுத்தமான தங்கத்திலும் கூட, மிகச் சிறிய அளவில், உற்பத்தியாளரால் அகற்ற இயலாத அசுத்தக் கலவை காணப்படலாம்.
செம்மைத்தரம் என்பது (தங்கம் போன்ற) விலையுயர்ந்த உலோகத்தின் எடை மற்றும் (உலோகக்கலவை மற்றும் அசுத்தங்கள் உள்ளிட்ட) மொத்த எடை ஆகியவற்றின் விகிதாச்சாரம் என்று கூறலாம். இது ஆயிரத்துக்கு இத்தனை பகுதிகள் என்று கணக்கிடப்படுகிறது. உச்சபட்ச சுத்தத் தங்கமான 24 கேரட் தங்கத்தின் செம்மைத்தரத்தை ஆய்ந்தால் ஆயிரத்துக்கு 999.99 பகுதிகள் சுத்தத் தங்கம் என்ற வீதத்தில் இருப்பதைக் காணலாம்.
ஹால்மார்க்கிங்
நுகர்வோர், தங்கம் வாங்கும் போது ஏமாந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்திய அரசு, பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (பிஐஎஸ்) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.
பிஐஎஸ், தங்கத்தாலான பொருட்களின் மீது அதன் தரமுத்திரையைப் பதித்து, ஆபரணங்கள் மற்றும் தங்க நாணயங்களுடைய சுத்தத்தின் அளவை உறுதிபடுத்தும் விதமாக, தரச்சான்றிதழ் வழங்கி வருகிறது.
தங்கத்தாலான பொருட்களின் மீது பிஐஎஸ் லோகோ, சுத்தம்/செம்மைத்தரம் குறித்த எண் (22 கேரட்டிற்கு, 916 என்ற எண் உபயோகிக்கப்படுகிறது) அஸ்ஸேயிங் மற்றும் ஹால்மார்க்கிங் மையத்தின் லோகோ, பொறிக்கப்பட்ட வருடம் மற்றும் நகைக்கடைக்காரரின் அடையாளக் குறிப்பு ஆகிய ஐந்து முக்கியத் தகவல்களும் பொறிக்கப்பட்டிருக்கும்.
ஜனவரி 1, 2017 முதல் 22 கேரட், 18 கேரட் மற்றும் 14 கேரட் வகை தங்க ஆபரணங்களுக்கு மட்டுமே ஹால்மார்க்கிங் செய்யப்போவதாக பிஐஎஸ் அறிவித்துள்ளது.
24 கேரட்
"24 கேரட் தங்கத்தை பிஐஎஸ் ஹால்மார்க் செய்வதில்லை. அது அவர்களின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் பிஐஎஸ்ஸினால் அங்கீகரிக்கப்பட்ட சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஆய்வுக்கூடங்களில் கொடுத்து அதன் சுத்தத்தைப் பரிசோதித்துத் தெரிந்து கொள்ளலாம்." என கீதாஞ்சலி ஜுவல்ஸின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான மெஹுல் சோக்ஸி கூறியுள்ளார்.
பேக்கேஜிங்
தங்க நாணயங்கள் பொதுவாக டேம்பர்-ப்ரூஃப் எனப்படும் சிதைக்கவியலாத பேக்கேஜிங்கில் தான் வருவது வழக்கம். தங்க நாணயத்தை வாங்கியவர்க்கு அதனை திரும்ப விற்கும் எண்ணம் இருப்பின் இந்த டேம்பர்-ப்ரூஃப் பேக்கேஜிங்கை கிழிக்கவோ அல்லது திறக்கவோ கூடாது என்பது நகைக்கடை அதிபர்களின் பரிந்துரை. ஏனெனில், இந்த பேக்கேஜிங் தான் அத்தங்க நாணயத்தின் சுத்தத்திற்கு உத்தரவாதம்.
வகைப்பாடு
வழக்கமாக, சந்தையில் தங்க நாணயங்கள் 0.5 கிராம் முதல் 50 கிராம் வரையிலான எடைகளில் கிடைக்கின்றன.
எனவே, தற்போதைய விலை நிலவரமான, ரூபாய் 29,785 (அக்டோபர் 11, 2017 மல்ட்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் உள்ளபடி), என்பதன் படி நீங்கள் வாங்கக்கூடிய, சின்னஞ்சிறிய தங்க நாணயம், அதாவது சுமார் 0.5 கிராம் எடையிலான நாணயத்தின் விலை சுமார் 1,800 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை இருக்கலாம் (11 அக்டோபர், 2017 நிலவரப்படி). நீங்கள் வாங்க நினைக்கும் வகையிலான நாணயம் உங்களுக்குக் கிடைப்பதும், கிடைக்காததும் நகைக்கடைக்காரரைப் பொறுத்தது.
செய்கூலி
தங்க நாணயங்களை வாங்குவது தங்க ஆபரணங்களை வாங்குவதைக் காட்டிலும் எளிது. சுத்தமான தங்கத்தை குறைந்த பட்ச எடையில், கம்மல், மோதிரம் போன்ற ஆபரணங்களுக்கான செய்கூலியைக் காட்டிலும் குறைவான செய்கூலியில் வாங்குவதற்கான வாய்ப்பை தங்க நாணயம் உங்களுக்கு வழங்குகிறது.
தங்க நாணயங்களுக்கான செய்கூலி (அல்லது உற்பத்தி செலவு) சுமார் 4% முதல் 11% வரை இருக்கலாம் என்கிறார் சோக்ஸி. இந்நிலையில், ஆபரணங்களுக்கான செய்கூலி பொதுவாக 8-10% என்ற அளவில் ஆரம்பித்து அதன் கலை வேலைப்பாட்டைப் பொறுத்து உயர்ந்து கொண்டே செல்லும்.
யாரிடமிருந்தெல்லாம் வாங்கலாம்?
உள்ளூர் நகைக்கடைக்காரர் முதல், வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, எம்எம்டிஸி (தங்கம் மற்றும் வெள்ளி விற்பனைக்கான அரசு அங்கீகாரம் பெற்ற பொதுத்துறை அமைப்பு) மற்றும் மூத்தூட் குழுமம் போன்ற வங்கி சாராத நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து தங்க நாணயங்களை வாங்கிக் கொள்ளலாம்.
மிகக் குறைந்த எடையிலான நாணயம் எங்கு கிடைக்கும்?
முத்தூட் குழுமம் போன்ற மிகச்சில நிறுவனங்கள், சில முன்னணி நகை கடைகள் 0.5 கிராம் போன்ற கம்மியான எடை கொண்ட நாணயங்களை விற்கின்றன.
முத்தூட்டின் வலைத்தளத்தில், 0.5 கிராம் எடையில், 24 கேரட்/999 செம்மைத்தரம் கொண்ட பொன்னாலான நாணயங்கள் விற்பனைக்கு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கத்தின் தற்போதைய விலை நிலவரப்படி, இது சுமார் 1,800 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது (அக்டோபர் 11,2017 நிலவரப்படி).
மேலும், லக்ஷ்மி, கணேஷா போன்ற பல்வேறு டிசைன்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களையும் முத்தூட் வழங்கி வருகிறது. டிசைனைப் பொறுத்து குறைந்தபட்ச எடை வகைப்பாடு வேறுபடுகிறது.
வங்கிகள்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா போன்ற சில வங்கிகள் குறைந்த பட்ச எடையுடைய நாணயங்களாக 2 கிராம் தங்க நாணயங்களை வழங்கி வருவதாக அதன் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கிகள் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள தத்தம் கிளைகளின் மூலம் விற்கின்றன. ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, 24 கேரட்/999 செம்மைத்தரம் உடைய தங்க நாணயங்களை எம்எம்டிஸியுடன் இணைந்து விற்பனை செய்கிறது.
விற்பனை எளிதா?
நீங்கள் வங்கியிலிருந்து தங்க நாணயங்களை வாங்கியுள்ளீர்கள் அல்லது வாங்கத் திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், வங்கிகள் இத்தங்க நாணயங்களை திருப்பி வாங்கிக் கொள்ளக்கூடாது என்பது ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியாவின் (ஆர்பிஐ) ஆணை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
விலை மாறுபாடு
வழக்கமாக, ஒரு நகைக்கடைக்காரரிடமிருந்து (இவரை A என்று வைத்துக் கொள்வோம்), வாங்கிய தங்க நாணயங்களை மற்றொரு நகைக்காரரிடம் (இவரை B என்று வைத்துக் கொள்வோம்) விற்பது உங்களுக்கு குறைவான ரீஸேல் தொகையையே பெற்றுக் கொடுக்கும். "இது ஏனெனில், நகைக்கடைக்காரர் B, தங்கத்துக்கு மட்டுமே விலை கொடுப்பார். நகைக்கடைக்காரர் A-விடமிருந்து நீங்கள் வாங்கும் போது அவரிடம் செலுத்திய செய்கூலி, நிர்வாகக்கூலி, நிகர லாபத் தொகை போன்றவற்றை B கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்.'' என்கிறார் சோக்ஸி.