இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் மிகப்பெரிய அளவில் வளர்ந்து நாடு முழுவதும் வர்த்தகம் செய்து வருகிறது ஈகாமர்ஸ் நிறுவனங்கள். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு காலங்களில் கடைகள் தள்ளுபடிகளை அறிவிப்பது போல் தற்போது ஈகாமர்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது.
ஈகாமர்ஸ் நிறுவனங்களின் இந்தத் தள்ளுபடி விற்பனையில் பல நன்மைகள் இருக்கும் வேளையில் சில மோசமான அனுபவங்களையும் நாம் சந்திக்கிறோம். ஆயினும் இத்தகைய நிறுவனங்களில் விற்பனை எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை.
இந்நிலையில் மக்களிடத்தில் தீபாவளி ஷாப்பிங் எங்குச் செய்யப் போகிறீர்கள் என்று தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் வாக்கெடுப்புச் செய்தபோது மக்களின் மன நிலை தெளிவாகப் புரிந்துள்ளது.
வாக்கெடுப்பு
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் இந்தத் தீபாவளிக்கு எங்கு ஷாப்பிங் செய்யப்போகிறீர்கள் என்ற ஒரு ஆய்வை ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மத்தியில் வைத்தோம். இதன் கடைசியில் ஒரு மாறுப்பட்ட தேர்வாகக் கடைக்குச் சென்று வாங்குவோம் என்ற ஒன்றையும் அளித்தோம்.
மக்களின் ஒருமித்த கருத்து
இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 79 சதவீதம் பேர் நேரடியாகக் கடைக்குச் சென்று தான் பொருட்களையும், ஆடைகளையும் வாங்குவேன் என்று தெரிவித்துள்ளனர்.
அமேசான்
ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மத்தியில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மத்தியில் கடுமையான போட்டி இருப்பதைப் போலத் தமிழ் குட்ரிட்டன்ஸ் வாக்கெடுப்பிலும் போட்டி நிலவியது.
ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மத்தியில் 12 வாக்குகளைப் பெற்று அமேசான் முதல் இடத்தில் இருந்தாலும், மக்களின் விருப்பத்தில் இரண்டாவது இடத்திலேயே உள்ளது.
பிளிப்கார்ட்
அமேசான் நிறுவனத்தைத் தொடர்ந்து பிளிப்கார்ட் 7 சதவீத வாக்குகளுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
பிற நிறுவனங்கள்
இந்த வாக்கெடுப்பில் ஸ்னாப்டீல் மற்றும் ஷாப்க்ளூஸ் தலா 1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று 3வது மற்றும் 4வது இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
காலம் மாறியது..
என்னதான் தொழில்நுட்பம் நம் கைகளின் நுனிக்கு வந்தாலும் மக்கள் முக்கியமான பொருட்களைக் கடைக்குச் சென்று நேரில் பார்த்து தான் வாங்குகின்றனர் என்பதற்கு இந்த ஆய்வு ஒரு சான்று.