ஜியோ என்ற பெயருக்கு இந்தியாவில் தனிச் சக்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும். ஆம், இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் 1 ஜிபி 4ஜி இண்டர்நெட் டேட்டாவிற்கு 200 ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து லாப மழையில் மகிழ்ச்சியாக நனைந்து கொண்டு இருக்கும் போது 2 வருட ஆய்வு மற்றும் ஆலோசனைக்குப் பின் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் இறங்கியது ரிலையன்ஸ் ஜியோ.
இந்திய டெலிகாம் சந்தையில் அன்று யாரும் அசைக்கமுடியாத இடத்தில் கொடிகட்டி பறந்த சில நிறுவனங்கள் ஜியோ வந்தாலும் எங்களை ஒன்று செய்யமுடியாது என்ற நினைப்பில் (மிதப்பில்) இருந்தபோது பல கட்டச் சோதனை ஒட்டங்கள் மூலம் பகுதி பகுதியாகச் சந்தைக்குள் திட்டமிட்டு நுழைந்தது ஜியோ.
இத்தகைய நிறுவனத்தின் வீழ்ச்சையைத் தான் டெலிகாம் சந்தையில் இருக்கும் போட்டி நிறுவனங்கள் தற்போது எதிர்கொண்டு உள்ளது. எப்போது வீழும் தெரியுமா..?
அறிவிப்பு..
26 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் சேவை பிரிவான ஜியோ 6 மாத இலவச சேவை அறிவிப்புடன் தனது முதல் காலடியை வைத்தது.
ரேஷன் கடைகள்
ஜியோவின் அறிவிப்பு வெளியான அடுத்த நாள் முதலே, இந்தியா முழுவதும் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் அங்காடிகளில் மக்கள் வரிசைக்கட்டி நின்று ஜியோ சிம்கார்டுகளை வாங்கி நின்றனர்.
இதுவரை மக்களை ரேஷன் கடைகள், கோவில்கள், புதிய படம் ரிலீஸ் ஆகும்போது தியேட்டர்களில் மட்டுமே வரிசைக்கட்டி நின்று கொண்டிருந்ததைப் பார்த்த இந்தியா சிம் கார்டு வாங்குவதற்காகவும் முதல் முறையாக வரிசைகட்டி நின்றது.
மக்களை கவர்ந்தது..
6 மாத இலவசம், ஏப்ரல் 1 முதல் சந்தையில் யாரும் கொடுக்க முடியாத தொகைக்கு டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவை அளித்தது ஜியோ. இதனால் மக்கள் மனத்தில் நீங்கா இடத்தைப் பிடித்த ஜியோ வெறும் ஒரு வருட காலத்தில் 13 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்று மொத்த சந்தையில் 10 சதவீத வர்த்தகத்தைப் பெற்று அசத்தியது.
போட்டி நிறுவனங்கள்
ஜியோவின் தடாலடி வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ளாத போட்டி நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை 50 சதவீதம் வரை குறைத்து இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடினர்.
இதுமட்டும் அல்லாமல் பெரிய நிறுவனங்கள், சிறிய டெலிகாம் நிறுவனங்களை முழுமையாக வாங்கவும், அல்லது இணைக்கவும் முற்பட்டனர். இதனால் மொத்த டெலிகாம் சந்தையும் தலைகீழாக மாறியது.
எப்போது வீழும்..?
ஜியோவின் மலிவான கட்டணங்கள் மற்றும் தள்ளுபடிகளுக்கு நிகராகப் பிற போட்டி நிறுவனங்களும் கட்டணத்தைக் குறைத்துள்ள நிலையில், இனி ஜியோ வீழ்ச்சி அடைந்து விடும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில்..
அடுத்தத் திட்டத்தைக் கையில் எடுத்த ஜியோ.
60 சதவீத மக்கள்
தோராயமாக இந்தியாவில் இருக்கும் 75 கோடி மொபைல் வாடிக்கையாளர்களில் 60 சதவீதம் பேர் இன்னமும் பேசிக் மாடல் அதாவது கால் மற்றும் டெக்ஸ் மெசேஜ் வரக்கூடிய போன்களையே பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.
இதுவே இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகமாக இன்றளவு உள்ளது.
ஜியோ போன்
இந்த மிகப்பெரிய சந்தை வாய்ப்பைச் சுதாரித்துக்கொண்ட ஜியோ சத்தமில்லாமல் எவ்விதமான அறிவிப்பு இல்லாமல் ரகசியமாக ஒரு திட்டத்தைத் தீட்டியது.
இதன் படி இந்தியாவில் உள்ள 60 சதவீத சந்தையைப் பிடிக்க 0 ரூபாயில் (முதலில் 1500 கொடுத்து வாங்க வேண்டும், 3 வருடத்திற்குப் பின் இத்தொகை திருப்பிக் கொடுக்கப்படும்) அதாவது இலவசமாக 4ஜி சேவை அளிக்கக் கூடிய ஒரு ப்யூச்சர் போனை அறிமுகம் செய்து, அதன் விற்பனை இன்னும் சில நாட்களில் வர உள்ளது.
இதனால் என்ன நடக்கும்
ஏற்கனவே ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களைத் தனது மலிவான சேவை மூலம் பிடித்துள்ள நிலையில், எஞ்சியுள்ள 60 சதவீத சந்தையை அடைய உள்ளது ஜியோ.
இந்தத் திட்டத்தின் மூலம் ஜியோ குறைந்த வருமானம் பெறுபவர்களையும், நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் கிராமங்களையும் நேரடியாக அடைய முடியும்.
கவர்ச்சி..
குறைந்த வருமானம் உடையவர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள, ப்யூச்சர் போன்களைப் பயன்படுத்துவோருக்குத் தனியாக மலிவுவிலை கட்டணத்தையும் ஜியோ அறிவித்துள்ளது.
இதன் மூலம் கண்டிப்பாகப் புதிய வாடிக்கையாளர்களை அதிகளவில் பெற முடியும்.
இன்னும் சில வருடங்கள்
ஜியோவின் மலிவான கட்டணங்கள் மற்றும் ஜியோ போன் அறிமுகத்தின் மூலம் இன்னும் சில வருடங்களில் இந்திய டெலிகாம் சந்தையில் வர்த்தகத்தில், வருமானத்தில், சேவையில் என அனைத்து விதத்திலும் ஜியோ ஆதிக்கம் செலுத்தும்.
கட்டண குறைப்பு
இந்நிலையில் இந்தியாவில் டெலிகாம் சந்தை மேலும் விரிவாக்கம் அடைய, டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமாக டிராய் IUC கட்டணத்தை 14 பைசாவில் இருந்து 6 பைசாவாகக் குறைத்துள்ளது. இது ஜியோவிற்குக் கூடுதல் லாபத்தை அளிக்கும்.
வீழ்வேன் என்று நினைத்தாயோ..?
இப்படி இருக்கும்போது ஜியோ கண்டிப்பாக வீழ்ச்சி அடையாது. ஒருவேளை ஜியோவை விடவும் குறைவான கட்டணத்திலும், மேம்படுத்தப்பட்ட சேவையைப் போட்டி நிறுவனங்கள் அளித்தால் ஜியோ வீழ்ச்சி அடைய வாய்ப்புகள் உண்டு.
ஆனால் அதிக லாபத்தை ருசி கண்ட டெலிகாம் நிறுவனங்கள் ஜியோவை விடக் கட்டணத்தைக் குறைக்கச் சிறிதளவு கூட வாய்ப்பில்லை.