நாதெள்ளா சம்பத் ஜூவல்லரி நிறுவனம் பண நெருக்கடியால் தமிழ் நாடு முழுவதும் தங்களுக்கு உள்ள 8 நகை கடைகளையும் மூட முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவை தொகையினைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திருப்பி அளிப்போன் என்றும் உறுதி அளித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவையை அளிப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருவதாகவும் நாதெள்ளா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்க நகை சேமிப்புத் திட்டம்
நாதெள்ளா நகை கடையின் அனைத்துக் கிளைகளிலும் தங்க நகை சேமிப்புத் திட்டம் மூலமாகப் பணம் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு 0% செய் கூலி, 0% சேதாரம் மற்றும் 0% வரியுடன் தங்க நகை மற்றும் நாணயங்களை அளித்து வந்தது.
வாடிக்கையாளர்கள்
தற்போது பண நெருக்கடியால் கடையினை மூடப் போவதாகச் செய்திகள் வெளியானதால் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்துள்ள வாடிக்கையாளர்கள் கடையினை முற்றுகையிட்டு தங்களது பணத்தினைத் திருப்பி அளிக்குமாறு கேட்டு வருகின்றனர்.
உறுதி
எதிர்பாராதவிதமாக நாதெல்லா நிறுவனம் பண நெருக்கடியில் சிக்கிக் கொண்டது, வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்தபடி நகைகளைக் கொடுப்போம். ஆனால் காலத் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம் என்று நாதெள்ளா நிறுவனம் சமுக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது.
இணையதளம்
பண நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நாதெள்ளா நகை கடையின் இணையதளப் பக்கம் (http://www.nathella.net/) முடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகின்றது.
நீண்ட காலம் காத்திருப்பு
நாதெள்ளா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள வாசுதேவன் என்ற வாடிக்கையாளர் தான் முதலீடு செய்த பணத்தினை நீண்ட காலமாகத் திருப்பி அளிக்காமல் நகையும் அளிக்காமல் காலத் தாமதம் செய்து வருவதாகச் சமுக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். இதேப்போன்று பல வாடிக்கையாளர்கள் தங்களுக்கு நேர்ந்துள்ள இக்கட்டான சூழல் பற்றிப் பதிவேற்றி வருகின்றனர்.
நாதெள்ளா
நாங்கள் எங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டிய பணத்திற்கான நிதியைத் திரட்டி வருகின்றோம். விரைவில் இந்தப் பண நெருக்கடி பிரச்சனை தீர்க்கப்படும் என்று நாதெல்லா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரபண்ணா குமார் நாதெள்ளா தெரிவித்துள்ளார்.
சேமிப்புத் திட்டங்களில் உள்ள பணம்?
தங்க நகை சேமிப்புத் திட்டங்கள் கீழ் எவ்வளவு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்க மறுத்துவிட்டனர், ஆனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள 7 நகை கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்பது மட்டும் உறுதி.
மூடப்பட்ட கடைகள்
நாதெள்ளா நிறுவனம் சென்னையில் உள்ள 5 கடைகளையும் வேலூர் மற்றும் ஓசூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையும் மூடியுள்ளது.
ஒப்புகை சீட்டு
சென்னையில் உள்ள கடையை அணுகும் வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் பணம் அல்லது நகை திருப்பி அளிக்கப்படும் என்று உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு வழங்கப்படுகின்றது.
புகார்
சென்னை மாநகர் காவல் துறையிடம் பாதிக்கப்பட்டவர்கள் நாதெள்ளா நிறுவனத்திடம் இருந்து தங்களது பணத்தினைப் பெற்றுத் தருமாறு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.