எஸ்பிஐ வங்கியின் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆ பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ராய்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதெராபாத் மற்றும் பாரதிய மஹிலா வங்கியில் இருந்து செக் புக் வைத்துள்ளவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி.
விரைவில் உங்களால் பழைய செக் புக்குகளைப் பயன்படுத்த முடியாது மற்றும் அந்த வங்கி கிளையின் ஐஎப்எஸ்ஸி குறியீடுகளையும் பயன்படுத்த முடியாது.
காலக்கெடு நீட்டிப்பு
செப்டம்பர் 30 முதல் துணை வங்கிகளின் செக் புக்குகள் மற்றும் ஐஎப்எஸ்ஸி குறியீடுகள் செல்லாது என்றூ எஸ்பிஐ வங்கி அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
புதிய செக் புக்கிற்கு எங்கு விண்ணப்பிப்பது?
வாடிக்கையாளர்கள் புதிய செக் புக்குகளுக்கு வங்கி கிளை, இணையதளம், மொபைல் பேங்க்கிங் அல்லது ஏடிஎம் வாயிலாக விண்ணப்பித்துப் பெறலாம்.
எஸ்பிஐ ஏடிஎம்-ல் செக் புக்கிற்கு எப்படி விண்ணப்பிப்பது?
எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் எஸ்பிஐ ஏடிஎம் கார்டினை ஸ்வைப் செய்த பிறகு ஏடிஎம் கார்டின் பின் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர்ச் சேவைகள் தெரிவைத் தேர்வு செய்து அதில் உள்ள செக் புக் பெறுவதற்கான கோரிக்கையினை அழுத்த வேண்டும். அப்படிச் செய்யும் போது உங்கள் செக் புக் வங்கியில் இருந்து மூன்று வேலை நாட்களில் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
பெருநகரச் சேமிப்புக் கணக்குகள்
பெருநகரங்களில் 5,000 ரூபாய் வரை குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத சேமிப்புக் கணக்குகளில் 75 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் போது 100 ரூபாய் + ஜிஎஸ்ட் அபராதமாக வசூலிக்கப்படும். இதுவே 50 சதவீதத்திற்கும் குறைவாக இருப்புத் தொகையினை வைத்து இருக்கும் போது 50 ரூபாய் + ஜிஎஸ்ட் அபராதமாக வசூலிக்கப்படும்.
கிராபப்புற கணக்குகள்
எஸ்பிஐ வங்கியின் கிராமப்புற கிளைகளில் சேமிப்புக் கணக்கை வைத்துள்ளவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை 1000 ரூபாய் என்றும் அதனை நிர்வகிக்காத போது 20 ரூபாய் + ஜிஎஸ்டி முதல் 50 ரூபாய் + ஜிஎஸ்டி வரை அபராத தொகை விதிக்கப்படும்.
சேமிப்புக் கணக்குகள் எண்ணிக்கை
எஸ்பிஐ வங்கியில் மொத்தமாக 40 கோடி சேமிப்புக் கணக்குகள் உள்ளதாகவும் அதில் 13 கோடிக் கணக்குகள் அடிப்படை சேமிப்பு கணக்குகளாகவும், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகள் என்றும் குமார் தெரிவித்தார்.
குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவை இல்லாத சேமிப்புக் கணக்குகள்
எஸ்பிஐ வங்கியில் அடிப்படை சேமிப்புக் கணக்குகள், ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகள் போன்றவற்றுக்குக் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை.
அபராதம் பெற்ற கணக்குகள்
மிச்சம் இருக்கும் 27 கோடி சேமிப்புக் கணக்குகளில் 15 முதல் 20 சதவீத சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்புகள்
இதுப்போன்று குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத வங்கி கணக்குகளின் பயனர்களுக்கு எஸ்பிஐ வங்கி நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
வசூலிக்கப்பட்ட அபராதம்
மே மாதம் மட்டும் குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்வகிக்காத வங்கி கணக்குகளில் இருந்து 235 கோடி ரூபாயினை எஸ்பிஐ வங்கி ஜூன் மாதம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சாதாரணச் சேமிப்புக் கணக்குகள்
சாதாரணச் சேமிப்புக் கணக்கை நிர்வகிக்கும் வாடிக்கையாளர்களால் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க முடியவில்லை என்றால் அடிப்படை சேமிப்பு கணக்காக மாற்றி அபராதத்தினைத் தவிர்ப்பதற்கான சேவையினையும் எஸ்பிஐ வழங்குகின்றது.