சமீப காலமாக இந்திய சீன எல்லையில் அவ்வப்போது பிரச்சனைகள் எழுந்து வருகிறது. இதனுடன் இந்திய மக்கள் மத்தியிலும் சீன பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ கூடாது என்ற எண்ணம் அதிகளவில் பரவிவரும் நிலையில், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மூலம் இரு நாடுகள் மத்தியிலும் வர்த்தகப் போர் உருவாகியுள்ளதாகச் சந்தை நிலவரங்கள் கூறுகிறது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதியைக் குறைக்க இந்திய அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளைச் சமீபகாலமாக விதித்து வருகிறது, குறிப்பாக டோக்லாம் பிரச்சனைக்குப் பின்.
சீன ஏற்றுமதி
சீனாவின் மொத்த ஏற்றுமதியில் 2 சதவீதம் வர்த்தகம் இந்தியா உடனானது. இந்நிலையில், இந்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் சீனாவிற்கு எச்சரிக்கை என்ற சர்வதேச சந்தையில் பார்க்கப்படுகிறது.
இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகளால் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் எப்படியெல்லாம் பாதித்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
பொம்மைகள்
செப்டம்பர் 1ஆம் தேதி BIS அமைப்பு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது பல்வேறு விதமான தர சோதனைகளையும், அளவீடுகளையும் மாற்றியது. இந்த மாற்றத்தின் மூலம் சீனாவில் இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளின் மதிப்பு மதிப்புப் பாதியாகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பொம்மைகள் சந்தையில் 70 சதவீதம் சீன பொருட்கள் வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெம்பர்டு கிளாஸ்
மொபைல் மற்றும் டேப்லெட்-களைக் காக்கும் டெம்பர்டு கிளாஸ் சீனாவில் இருந்து அதிகளவில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டது. இது சந்தை விலையைவிடவும் மிகவும் குறைவான விலையில் இந்தியாவிற்குச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் சந்தையைக் காக்கும் விதமாக எதிர்ப்புக் குவிப்பு மற்றும் இணைந்த கடமை இயக்குநரகம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டெம்பர்டு கிளாஸ் மீது anti-dumping வரியை விதித்தது.
டையர்
பஸ் மற்றும் லாரிகளில் பயன்படுத்தும் ரேடியல் டையர்கள் சீனாவில் இருந்து அதிகளவில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் உள்நாட்டுத் தயாரிப்பாளர்களைக் காக்கும் பொருட்டு அடுத்த வருடத்திற்கு இத்துறை இறக்குமதி மீது anti-dumping வரியை விதிக்கப்பட்டது.
பவர்
இந்தியாவில் மின்சாரத் துறையும் பல சீன நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக ஹர்பின் எலக்ட்ரிக், டாங்பாங் எல்க்ட்ரானிக்ஸ், ஷாங்காய் எல்க்ட்ரிக் மற்றும் சிபாங் ஆட்டோமேஷன் ஆகிய நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உபகரணங்கள் அளிக்கவோ அல்லது மின்சார விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் கிழக்கு மின்சாரத் தளத்தில் ஏற்பட்ட சைபர் தாக்குதலுக்குப் பின் இத்துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களின் முதலீடு முதல் அதிகாரிகள் வரையை அனைத்து தரப்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மின்சாரத் துறையில் புதிதாகக் களமிறங்க திட்டமிடும் வெளிநாட்டு நிறுவனங்கள் இனி பல்வேறு கண்டிப்பான விதிமுறைகளைத் தாண்டி வரவேண்டியிருக்கும்.
டெலிகாம்
மத்திய எலக்ட்ரானிக் மற்றும் ஐடி அமைச்சகம் சுமார் 21 ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிக்கும் முறை மற்றும் வடிவத்தைப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும், அதன் பின்னரே இதனை இந்தியாவிற்குள் விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த 21 நிறுவனங்களில் பெரும்பாலானவை சீனா நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பு
அதேபோல் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஐடி மற்றும் டெலிகாம் பொருட்கள் மீது தீவிரமாகக் கண்காணிப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாகப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் தங்களது சர்வர்களைச் சீனாவில் வைத்திருக்கும் நிறுவனங்களாகும்.