இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் டிசம்பர் 1 முதல் தனது வாய்ஸ்கால் சேவையை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் வாய்ஸ் கால் வாடிக்கையாளர்கள் வேறு டெலிகாம் சேவை நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம் என டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.
டிராய்
இனி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 4ஜி டேட்டா சேவை மட்டுமே அளிக்கும். இந்நிலையில் தனது வாய்ஸ் சேவையை வருகிற டிசம்பர் 1,2017 முதல் முழுமையாக நிறுத்த உள்ளது என டிராய் அமைப்புச் சந்தையில் இருக்கும் பிற டெலிகாம் நிறுவனங்களுக்குத் தெரிவித்துள்ளது.
8 வட்டங்கள்
இந்தியாவில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஆந்திர பிரதேசம், ஹரியான, மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் கிழக்கு மற்றும் மேற்கு, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் 2ஜி மற்றும் 4ஜி சேவைகளை அளித்து வருகிறது.
மேம்பாடு
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கைப்பற்றிய சிஸ்டமா ஷியாம் டெலிசர்வீசஸ் நெர்வொர்கை சிடிஎம்ஏ சேவைக்கு மேம்படுத்தித் தனது நெட்வொர்க் உடன் இணைக்க உள்ளது. இதன் மூலம் டெல்லி, ராஜஸ்தான், மேற்கு உத்திர பிரதேசம், கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம், குஜராத் மற்றும் கொல்கத்தா ஆகிய வட்டங்களில் 4ஜி சேவை அளிக்க உள்ளதாக டிராய் அமைப்பிடம் தெரிவித்துள்ளது.
டிராய்
வாய்ஸ் கால் சேவையை நிறுத்துவதற்காகவும், 4ஜி சேவையை மேம்படுத்தி விரிவாக்கம் செய்வதற்கான அனைத்து விதமான தகவல்களையும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அளித்துள்ளது. மேலும் இந்நிறுவன சேவையைப் பெற விரும்பாதவர்கள் எவ்விதமான தடையும் இன்றி வேறு டெலிகாம் சேவை நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம் என டிராய் தெரிவித்துள்ளது.
மொத்த கடன்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சுமார் 46,000 கோடி ரூபாய் அளவிலான கடனில் உள்ளது. இந்தக் கடன் அளவைக் குறைக்கவும் மேலும் அதன் அளவீடு அதிகரிக்காமல் இருப்பதற்கும் வாய்ஸ் கால் சேவையை நிறுத்தியுள்ளது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்.