இந்திய தனியார் வங்கிகளில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் எச்டிஎப்சி வங்கி டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க இணையதளப் பரிவர்த்தனைகளுக்கான ஆர்டிஜிஎஸ், என்ஈஎப்டி கட்டணத்தினை முழுமையாக நீக்கியுள்ளது.
ஆனால் செக் எனப்படும் காசோலை மீதான பரிவர்த்தனை கட்டணத்தினை உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண முறை அடுத்த மாதம் துவக்கம் முதல் அமலுக்கு வர இருக்கின்றது.
எப்போது முதல் கட்டணங்கள் கிடையாது?
மறு சீரமைக்கப்பட்டுள்ள கட்டணம் விதிகளின் படி சேமிப்பு மற்றும் சம்பள கணக்குகள் வாடிக்கையாளர்கள் இணையதளப் பரிவர்த்தனைகளுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை என்பது 2017-ம் அண்டு நவம்பர் 1 முதல் வந்துள்ளதாக எச்டிஎப்சி நிர்வாகத் தெரிவித்துள்ளது.
ஆர்டிஜிஎஸ்
முன்பு வாடிக்கையாளர்கள் ஆர்டிஜிஎஸ் பணப் பரிவர்த்தனை முறையில் 2 முதல் 5 லட்சம் ரூபாய் வரை அனுப்பும் போது 25 ரூபாயும், 5 லட்சத்திற்கும் அதிகமாகச் செய்யும் போது 50 ரூபாய் எனவும் கட்டணம் வசூலித்து வந்தது.
என்ஈஎப்டி
என்ஈஎப்டி சேவையின் கீழ் 10,000 ரூபாய் வரை பணம் அனுப்பும் போது 2.5 ரூபாயும், 10,001 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை பரிவத்தனை செய்யும் போது 5 ரூபாயும், 1 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் போது 15 ரூபாயும் எச்டிஎப்சி வங்கி கட்டணமாக வசூலித்து வந்தது.
வங்கி பரிவர்த்தனைகள்
ஆர்டிஜிஎஸ் மற்றும் என்ஈஎப்டி பரிவர்த்தனைகளை வங்கி கிளைகளில் வந்து செய்யும் போது கட்டணம் வசூலிக்கப்படும்.
செக் புக்
எச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்குச் செக் புக் வேண்டும் என்றால் ஆண்டுக்கு 25 தாள்கள் கொண்ட ஒன்று மட்டும் இலவசம் ஆகும். இதுவே கூடுதலாகப் பெறப்படும் ஒவ்வொரு செக் பிக்கிற்கும் 75 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.
அபராதம்
வங்கி கணக்கில் பணம் இல்லை என்று செக் திரும்பி வந்தால் 500 ரூபாய் ஒரு செக்குக்கு என அபராதம் வசூலிக்கப்படும். முன்பு இதற்கான கட்டணம் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை இருந்தது.
ஆர்டிஜிஎஸ் என்றால் என்ன?
ரியல் டைம் குரோஸ் செட்டில்மெண்ட் (RTGS) என்பது இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் ஒரு ஆன்லைன் நிதி பரிமாற்ற யுக்தியாகும். ஆர்டிஜிஎஸ்ஐ (RTGS) பயன்படுத்தி எந்த விதமான தாமதம் இல்லாமல் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு நிதியை மாற்றிக் கொள்ளலாம். மேலும், இந்த ரியல் டைம் குரோஸ் செட்டில்மெண்டில், பரிவர்த்தனைகள் அனைத்தும் மொத்தமாக மேற்கொள்ளப்படாமல், ஒவ்வொரு பரிவர்த்தனையாகப் பரிசீலிக்கப்படுகின்றது.
ஆர்டிஜிஎஸ்ஐ பயன்படுத்தி ஆன்லைன் மூலம் குறைந்த பட்சம் சுமார் 2 லட்சம் ரூபாயை ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றலாம். எனினும், இதில் உட்ச பட்ச எல்லை என்பது வரையறுக்கப்படவில்லை. ஆர்டிஜிஎஸ் மூலம் நிதியை மாற்ற ஒரே ஒரு நிபந்தனை தான் உள்ளது. அதாவது பணத்தை அனுப்பும் மற்றும் பணத்தைப் பெறும் வங்கிகள் இரண்டும் ஆர்டிஜிஎஸ் வசதியைப் பெற்றிருக்க வேண்டும்.
என்இஎஃப்டி (NEFT) என்றால் என்ன?
என்இஎஃப்டி என்ற தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை முறை வாயிலாகப் பரிவர்த்தனையைக் காலை 8:00 AM முதல் 6:00 PM வரை செய்ய இயலும். இதில் குறைந்தபட்சம் 1 ரூபாய் முதல் 10 லட்சம் வரை அதிகபட்சமாகப் பரிவர்த்தனை செய்யலாம்.