இந்தியா முழுவதும் வான்வழி மூலம் இணைப்பை ஏற்படுத்த அடுத்த 15 வருடத்தில் தற்போது இருக்கும் விமான நிலையங்களின் எண்ணிக்கையை விடவும் இரு மடங்கிற்கு அதிகமாக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
மத்திய அரசின் இப்புதிய திட்டத்திற்காகச் செலவிடப்படும் தொகை எவ்வளவு தெரியுமா..?
விமான நிலையம்
இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்கு அதிகரிக்கும் வகையில் புதிதாகச் சுமார் 100 விமான நிலையங்களைச் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
70 விமான நிலையங்கள்
தற்போது மத்திய அரசு திட்டமிட்டுள்ள 100 விமான நிலையத்தில் 70 விமான நிலையங்கள் இதுவரை விமானச் சேவை அளிக்கப்படாத பகுதியில் அமைக்கப்படவும். மீதமுள்ளவை ஏற்கனவே விமான நிலையம் இருக்கும் பகுதியில் சரக்கு அல்லது வர்த்தகச் சேவையை மேம்படுத்த விரிவாக்கத் திட்டமாக அமைக்கப்பட உள்ளது.
மீதமுள்ள 30
70 விமான நிலையங்கள் விமானச் சேவை இல்லாத பகுதிகளில் அமைக்கப்படும் நிலையில், மீதமுள்ள 30 விமான நிலையங்கள் ஜெய்ப்பூர், கவ்ஹாத்தி, புனே, டெல்லி, மும்பை, கோவா எனச் சில முக்கியமான வர்த்தகப் பகுதிகளில் அமைய உள்ளது.
நீண்ட கால அடிப்படை
இந்தியாவின் விமானப் பயணிகள் மற்றும் சேவைகள் அதிகரித்து வரும் இவ்வேளையில் நீண்ட கால அடிப்படையில் நாட்டின் வளர்ச்சிக்காகப் புதிதாக 100 விமான நிலையங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது எனச் சின்ஹா தெரிவித்தார்.
உள்நாட்டு விமானப் பயணிகள்
உலகளவில் உள்நாட்டு விமானப் பயணிகளை அதிகளவில் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருக்கும் நிலையில் நாட்டில் தற்போது முழுமையாக இயங்கக் கூடிய 100 விமான நிலையங்கள் மட்டுமே உள்ளது.
தனியார் நிறுவனங்கள்
இந்திய சந்தையில் தற்போது அதிக வாடிக்கையாளர்கள் மற்றும் விமானச் சேவையில் முன்னணியில் இருப்பது இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய தனியார் நிறுவனங்கள் மட்டுமே.
நாட்டில் பெரு நகரங்களைச் சிறு நிறுவனங்களின் வாயிலாக இணைக்கும் திட்டத்திற்காகத் தனியார் நிறுவனங்கள் 100க்கும் அதிகமான சிறிய ரக விமானங்களை வாங்குகிறது.
2,500 ரூபாய் திட்டம்..
மேலும் மத்திய அரசின் 2,500 ரூபாய் விமானப் பயணத் திட்டம் மக்கள் மத்தியில் விமானச் சேவைக்குக் கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என நம்பப்பட்ட நிலையில் தான் மத்திய அரசு புல்லட் ரயில் திட்டத்தை அறிவித்தது.
இந்தியா முழுவதையும் விமானம் மூலம் இணைக்கத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு எதற்காக 1.1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் புல்லட் ரயில் அமைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.