முதலீட்டுச் சந்தையில் தற்போது கிரிப்டோ கரன்சிக்கு (பிட்காயின்) அடுத்து அதிகப்படியான லாபம் கிடைக்கும் ஒரு சந்தை என்றால் பங்குச்சந்தை தான். பொதுவாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது கஷ்டம், அதற்கு அதிகளவிலான புரிதல் வேண்டும் என்பது போன்ற பல கருத்துக்கள் நிலவியது.
ஆனால் இன்று காலம் மாறியுள்ளது, இன்றளவில் பல இளைஞர்கள் பங்குச்சந்தையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் பல ஆயிரங்களைச் சம்பாதிக்கின்றனர்.
இன்னும் சிலர் கோடி கணக்கில் சம்பாதிக்கின்றனர், இதில் ஒருவர்தான் நாம் இப்போது பார்க்போகும் ராகேஷ்.
ராகேஷ்
இந்தியாவில் பிரபலமான பங்குச்சந்தை முதலீட்டாளர்களில் ஒருவர் தான் ராகேஷ் என்கிற ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.
இவர் திங்கட்கிழமை ஒரு நாளில் மட்டும் சுமார் 900 கோடி ரூபாய் சம்பாதித்துப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
டைட்டன்
ராகேஷ் இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார், இதில் டைட்டன் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட 8.02 சதவீத பங்குகளில் முதலீடு செய்துள்ளார் ராகேஷ்.
ஆதாவது 715,86,220 பங்குகள்.
காலாண்டு முடிவுகள்
செப்டம்பர் காலாண்டில் டைட்டன் நிறுவனம் சுமார் 67 சதவீத அதிக லாபத்தைப் பெற்றுள்ள நிலையில், இக்காலாண்டு முடிவுகள் வெளியானதின் மூலம் திங்கட்கிழமை இந்நிறுவன பங்குகள் 52 வார உயர்வான 824.65 ரூபாயை அடைந்தது.
திங்கட்கிழமை வர்த்தகம்
வெள்ளிக்கிழமை 657.4 ரூபாயில் முடிந்த டைட்டன் பங்குகள் திங்கட்கிழமை வர்த்தக முடிவில் தேசிய பங்குச்சந்தையில் இதன் அளவு 780.3 ரூபாயாக முடிந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில்
திங்கட்கிழமை வர்த்தக முடிவின் படி டைட்டன் நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வைத்துள்ள பங்கு மதிப்பு மட்டும் 5,500 கோடி ரூபாய். டைட்டன் நிறுவனத்தின் 52 வார உயர்வில் மகிழ்ச்சி அடைந்த ராகேஷ் இந்நிறுவனத்தில் இருந்த சிறு பகுதியை விற்பனை செய்துள்ளார்.
875 கோடி ரூபாய்
இந்தப் பங்கு விற்பனையின் மூலம் ராகேஷ் சுமார் 875 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.