உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் பாதிப்பு இந்திய பங்கு சந்தைபில் இருக்கும் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் ஆர்பிஐ வங்கி டிசம்பர் மாதம் வட்டி விகிதத்தினைக் குறைக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் தங்களது நிலைப்பாட்டினை மறு ஆய்வு செய்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமையான இன்று பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 64.27 டாலராக உள்ளது, இதுவே WTI கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு விலை 57.35 ரூபாயாக உள்ளது.
பங்கு சந்தை
நேற்று புதிய உச்சத்தினைத் தொட்ட சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் செவ்வாய்கிழமையான இன்று சரிவை சந்தித்துள்ளன. இன்று பிற்பகல் 1:20 மணி நிலவரத்தின் படி சென்செக்ஸ் 187.89 புள்ளிகள் என 0.56 சதவீதம் சரிந்து 33,536.46 புள்ளிகளாகவும், நிப்டி 52.30 புள்ளிகள் என 0.50 சதவீதம் சரிந்து 10,399 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.
பணவீக்கம்
அதிக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வது என்பது பணவீக்கத்தினை அதிகரிக்கும், அன்றாடத் தேவைக்கான பல பொருட்கள் மீதான விலைகள் உயரும்.
ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பு நீக்கம்
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஜூன் மாதம் 5.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமலுக்குக் கொண்டு வரப்பட்டதால் ஏற்பட்ட சரிவாகும்.
ஆர்பிஐ
கச்சா எண்ணெய் விலை 1 பேரலுக்கு 10 டாலர் வரை உயர்ந்தால் வளர்ச்சி விகிதம் 0.15 சதவீதம் சரியும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. மேலும் இது மொத்த விலை குறியீட்டையும் நேரடியாகப் பாதிக்கும்.
கச்சா எண்ணெய் விலை உயர முக்கியக் காரணம்?
கடந்த நான்கு வாரங்களாகக் கச்சா எண்ணெய் விலை தொடர் உயர்வைச் சந்தித்துள்ளது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியினைக் குறைக்கவும் முடிவு செய்துள்ளதால் தற்போதைக்குப் பெட்ரோலியம் பொருட்கள் விலை குறைய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகின்றது.
சவுதி அரேபியா எண்ணெய் நிறுவனங்கள் எடுத்துள்ள இந்த முடிவால் மட்டும் 2017-ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை 9.98 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இந்தியா
உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் மூன்றாம் மிகப் பெரிய நாடாக இந்தியா உள்ளது. அதே நேரம் இந்தியாவில் இருந்து நேப்பால், வங்க தேசம், மியான்மர், பூட்டான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றது. ஒரு நாளைக்கு இந்தியாவில் 4.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்றது.
பொருளாதார வளர்ச்சி
இந்தியா தனக்குத் தேவையான 80 சதவீத கச்சா எண்ணெய்யினை இறக்குமதி செய்வதால் கச்சா எண்ணெய் விலை உயரும் போது இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 6.75 முதல் 7.50 சதவீதமாக 2017-2018 ஆண்டில் இருக்கும் என்று கூறப்படுகின்றது.