இந்திய ஐடி துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் அனைத்துத் தற்போது பெரிய அளவிலான வர்த்தகப் பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக எச்1பி விசாவில் துவங்கி, புதிய தொழில்நுட்பத்தில் ஆட்கள் குறைபாடு, பன்னாட்டு நிறுவனங்களின் கட்டண முறை மாற்றம் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஐடி நிறுவனங்கள் தற்போது கையில் எடுத்திருக்கும் ஆட்டோமேஷன் ஊழியர்கள் மத்தியில் பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. குறிப்பாக அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் மத்தியில் இது பெரிய தலைவலியாகவே உள்ளது.
இந்நிலையில் ஐடித்துறையில் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறித்துப் பாலகிருஷணன் கூறியதைப் பாருங்கள்.
பாலகிருஷ்ணன்
இந்திய ஐடி நிறுவனங்கள் அடுத்தச் சில வருடங்களுக்குக் குறைவான அளவிற்கே புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்தும், அதுமட்டும் அல்லாமல் மென்பொருள் ஏற்றுமதி வளர்ச்சி அளவான 7-8 சதவீதத்தையும் அடைய முடியாது என மென்பொருள் துறையில் மூத்த அதிகாரி மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான வி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதனுடன் பாலகிருஷ்ணன், இந்திய ஐடித்துறை அடுத்த வருடம் சிறப்பான வளர்ச்சி அடையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
6 மாத வர்த்தகம்
2017-18ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தைப் பார்க்கும் போது இந்த வருடம் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி, பன்னாட்டுச் சந்தையில் நிலவும் தொழில்நுட்ப மாற்றத்தின் மூலம் அதிகளவிலான மாற்றத்தைச் சந்தித்துள்ளது.
3 முக்கிய நிறுவனங்கள்
இந்நிலையில் நிறுவனங்கள் ஊழியர்களைச் சேர்க்கும் அளவு அதிகளவில் குறையும், இதன் பாதிப்பு முழுக்கமுழுக்க ஆட்டோமேஷன் வாயிலாக வந்தது. மேலும் நாட்டின் 3 பெரிய ஐடி நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் ஊழியர்கள் எண்ணிக்கை வளர்ச்சியில் தொய்வை சந்தித்துள்ளது எனப் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா
இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகள் தற்போது கைவிட்டு இருந்தாலும், அடுத்தச் சில மாதங்களில் இதன் நிலை முழுமையாக மாறி மீண்டும் இந்திய நிறுவனங்களின் ஆதிக்கம் வெளிநாடுகளில் தொடரும். இது உண்மையில் இந்திய சந்தைக்குச் சாதகமான செய்தி என்றே சொல்ல வேண்டும்.